Thursday 31 December 2009

வா வா மார்கழி குளிரே...



பிரிவு வந்திருக்கிறது
பரிவு தந்த வருடம்
சரிந்துப் போகப்போகும்
முறிவு வந்திருக்கிறது!

சினேகிதம் பல தந்திருக்கிறது
சேவைகள் பல செய்திருக்கிறது
பாதகம் சில வந்திருந்தாலும்
பாதைகள் பல கொண்டிருக்கிறது!

காலம் கடப்பது ஒன்றும்
பாலம் கடப்பது மாதிரியில்லை
மறக்கவில்லை உன்னை நாங்கள்
மறந்திருந்தால் இல்லை நாங்கள்
போய் வா பொதிகை சாரலே
நீ எப்போதும் எங்கள் இதயத்தில் தூறலே!



மெல்லிய தென்றலாய்
மேனி வருடும் மேகமாய்
பெண்ணிய கூந்தலாய்
சொல்லியல் தமிழாய்
மீண்டும் ஒரு வ‌ருட‌ம்
வா வா மார்கழி குளிரே!

இந்த வருடமாவது
காக‌ம் க‌ரைவ‌து
நம் காதில் கேட்க‌ட்டும்!
குயில்க‌ள் கூவுவ‌தை
ம‌னது கூர்ந்து க‌வ‌னிக்க‌ட்டும்!

மரங்கள் நம் மனதை
கவர்ந்து இழுக்கட்டும்
செடிகொடிகள் நம்மோடு
சேர்ந்து வளரட்டும்!

காட்டுக்குள் கட்டிய வீடுகள்
சீக்கிரம் அழியட்டும்
வீட்டுக்குள் காடுகள் வளரும்
விந்தை செழிக்கட்டும்!

பூனையும் நாயும் நம்மோடு
இணைந்து பழகட்டும்
ஆடுகளையும் மாடுகளையும்
நம் நேசம் அணைக்கட்டும்!

சாரல் படுமளவுக்கு
மழையில் நனைவோம்
ஜலதோசம் வருமளவுக்கு
அருவியில் கூடுவோம்!

பக்கத்து வீட்டுக்காரரிடம்
பழகத் தொடங்குவோம்
எதிர் வீட்டுக்காரருக்கு
ஏணி கொடுத்து உதவுவோம்!

மீதம் ஏதுமில்லாது
அன்பை பொழிவோம்
மிரண்டு போகுமளவு
நட்பை பிழிவோம்!

காலநேரம் கடந்துவிடாமல்
கடமைகளை செய்குவோம்
வீடு போய் சேர்ந்ததுமே
குதூகலத்தில் மூழ்குவோம்!

உற்சாகமே உணவாகட்டும்
உணவெல்லாம் மருந்தாகட்டும்
பேதங்கள் கடந்து போகட்டும்
கனவுகள் உணர்வாகட்டும்
புகைக்கு தடை போடுவோம்
பகைக்கு விடை கொடுப்போம்!

இனியாவது ஈழம் இர‌க்கம் பெறட்டும்
இரவினில் நல்ல உறக்கம் வரட்டும்
காற்று மது மயக்கம் தரட்டும்
கனவிலும் பல இனிமை மலரட்டும்!

Wednesday 30 December 2009

இவர் தான் நீங்கள் தேடும் மனிதர்...



யாரையாவ‌து பார்த்து 'இப்படி ஒரு மனிதரா...' என்று நாம் பிர‌மித்து நிற்ப‌து எப்போதாவ‌து ந‌ட‌க்கும், அது இப்போது ந‌ட‌ந்திருக்கிற‌து... ஆம், அவ‌ர் சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர்... அவர் தன்னைப்ப்ற்றி சொல்லும் விபரங்கள் நமக்கு அதிர்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது... பொதுவாக இதுபோன்ற மனிதர்களை நாம் சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம்... எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியை இங்கு தருகிறேன்... இதை படித்தபின் உங்களுக்குள் ஒரு பாதிப்பு உண்டாகும் என்பது மட்டும் உண்மை.

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். சம்பளம் வாங்கி அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.



காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

இப்படிப் பட்டவர்களால் தான் நம் நாடு உயர உயரப் பறக்கப்போகிறது என்பது திண்ணம். அந்த வானம் சீக்கிரம் நம் வாசல் வந்து வசப்படும் என்பது என் எண்ண‌ம்.

Tuesday 29 December 2009

இப்படி சொன்னாலும் சொல்வார்கள் பிரபலங்கள்!


கடக்க இருக்கும் 2009ம் வருடத்தில் தங்களின் பங்கு பற்றி பிரபலங்கள்  இப்படிச் சொன்னால் எப்படியிருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை... சும்மா வந்து படிச்சுட்டுப் போங்க...

க‌லைஞர்: மிக‌ அற்புத‌மான‌ வ‌ருட‌ம்... தேர்த‌ல் வெற்றிக‌ளை விட‌ உளியின் ஓசைக்கு கிடைத்த‌ விருதைத்தான் பெருமையாக‌ நினைக்கிறேன். வ‌யித்து க‌டுப்பு வ‌ந்த‌வ‌ன் வாய்க்கு வ‌ந்த‌தெல்லாம் பேசுவா‌ங்க‌ற மாதிரி கோபால‌புர‌ம் வீட்டை த‌ன‌க்கு பிற‌கு இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ம‌னையா இருக்கும்னும், வ‌ர்ற‌ ஜூன் மாத‌த்தோட‌ ஓய்வு பெற‌ போற‌‌தாவும் உள‌றி கொட்டிட்டேன்... ந‌ல்ல‌வேளை கோபால‌புர‌ம் வீடு ப‌த்தி சொல்றப்ப எனக்குப் பிற‌குன்னு சொல்லிட்டேன்... ஓய்வு ப‌த்தி சொல்லும்போது வ‌ருஷ‌த்த‌ சொல்லாம‌ விட்டிருக்க‌னும்...

ஜேய‌ல‌லிதா: அருமையான‌ வ‌ருட‌ம்... இந்த‌ வ‌ருட‌த்தின் முக்கால்வாசியை தோழியோடு சேர்ந்து கொட நாட்டுல‌ கொண்டாடியாச்சு... கட்சியாவது, கூட்டணியாவது எல்லாம் மறந்து இய‌ற்கையை ர‌சித்து, ர‌சித்து போன‌ வ‌ருட‌ம்... ராமதாஸ விரட்டி விட்டாச்சு, மீதி பேர என்ன பேசினாலும் போகமாட்டேங்கறாங்க... அதுக்கு ஏதாவது வழி பண்ணனும்... மைனாரிட்டி திமுகா அர‌சு ம‌க்க‌ளை கொடுமை செய்கிற‌து... இதை மத்தியில் ஆளும் கையாலாகாத‌ அரசும் வேடிக்கைப் பார்க்கிறது... இதை நான் சும்மாவிடப் போவதில்லை...

தங்கபாலு: தலை தப்பிய வருடம்... 2009 முழுதும் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்ததே பெரிய சாதனை... இதிலிருந்தே தெரியவில்லையா இது எவ்வளவு சிறந்த வருடம் எனறு... அன்னை சோனியாஜியின் ஆலோசனையின்படி சத்தியமூர்த்திபவனில் வாஸ்துபடி மரத்தை வெட்டி சாந்தி செய்திருக்கிறேன்... இனி நான் தான் தமிழக காங்கிரஸின் நிரந்த‌ர தலைவர்...

ராமதாஸ்: கேவலமான வருடம்... வருடமா இது... பிச்சைக்காரனுக்கு பீட்ஸா போடர மாதிரி ஒரு எம்பியாவது கொடுத்திருக்க வேண்டாமா... 2008ல் எப்படியிருந்தேன் நான்... இதை நினைக்கையில் பத்திகிட்டு வருது... அதோடு விட்டதா, தண்ணியடிச்சவன் தரையில கிடந்த மாதிரி என்ன அம்போன்னு தனியா தவிக்க விட்டிருக்கிற‌ வருடம்... கடவுளே, என்னை யாரும் சீண்டிக்கூட பார்க்க மாட்டங்கறாங்களே, இப்ப‌ என்ன செய்யறதுன்னு தெரியலேயே...

திருமாவளவன்: கடுப்பான வருடம்... அடங்க மறுன்னு சொல்லிட்டு அலைஞ்சுகிட்டு இருந்தவனை அடக்கி காங்கிரசுக்கு கீழ‌ அடிமையாக்குன வருடம்... பத்தாதற்கு இந்த ராஜபக்சே வேறு கூப்பிட்டு கூட்டத்துல விட்டு கும்மியடிச்சி அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டான்... காறிதுப்பாத்து தான் பாக்கி... வெட்கக்கேடு... ஏதோ உல்லாசம் போன மாதிரி இலங்கைக்குப் போனதை தொடரா எழுதிகிட்டிருக்கிறது தான் சாதனை...

வைரமுத்து: புகழ்பாடிய  வருடம்... சென்ற வருடம் என்னை வென்ற வருடம்... மென்று தின்ற வருடம்... எதிரிகளை கொன்ற வருடம்... கலைஞர் என்னும் குடும்ப கொடையாட்சியின் கீழ் தமிழகம் செழித்த வருடம்... தமிழை புரட்டி புரட்டி போட்டு கலைஞரை பாராட்டி பாராட்டி என் வாயும், வயிரும் வலித்த வருடம்... அப்படியும் கலைஞரை அதிகம் பாராட்டியது யார் என்பதில் எனக்கு இரண்டாம் இடமே கொடுத்த கருமி வருடம்... இருமி இருமி தொண்டை வரண்ட‌ வருடம்...

ஜெகத்ரட்சகன்: பிரபலமான வருடம்... சும்மா கெடந்தவனுக்கு சுண்ட கஞ்சி கிடைச்சமாதிரி எனக்கு எம்பியும், மந்திரி பதவியும் கொடுத்த வருடம்... இதற்கு
கைமாறாக நான் கலைஞருக்கு போடும் பாராட்டு என்னும் ஜால்ரா மழையில் கோபாலபுரமே குதூகலத்தில் கும்மாளமிடுகிறது... கடும் போட்டிக்கு மத்தியில் நம்பர் ஒன் ஜால்ரா பட்டம் கிடைத்ததும் இந்த வருடத்தில் தான்... இந்த இடத்தை தாகக வைக்க வேண்டியது தான் இப்போதைய தலையாயப் பணி...

வாலி: வயிற்றெரிச்சல் வருடம்... கடந்த வருடம் கலைஞரை புகழ்வதிலும், எதிர்கட்சிகளை ஏளனம் செய்வதிலும் நான் தான் நம்பர் ஒன்... இந்த வருடம் அதை தட்டிப் பறித்து விட்டார்களே இந்த ஜெகத்ரட்சகனும், எனது பரம வைரியான வைரமுத்துவும்... என்ன செய்ய... புது வருடத்திலாவது 'பெண் சிங்கத்தை' கையில் எடுத்து இவர்களை பார்த்துவிடுகிறேன் ஒரு கை...


விவேக்: கண்டமான வருடம்... சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டிங்கற மாதிரி இந்த புவனேஷ்வரி மேட்டருல மைக்க புடிச்சி நிறைய மீட்டர் உட்டு மாட்டிகிட்ட வருடம்... இந்த பத்திரிக்கைகாரங்க என்னை எங்க பார்த்தாலும் ஊடு கட்டி அடிக்கிறாங்க... புவனேஸ்வரி வெளிய வந்து அவ தொழில் நல்லா விருத்தியாயிடுச்சி, ஆனா என் தொழில் படுத்துடும் போலிருக்கேடா சாமி...

புவனேஷ்வரி: வசூலில் சாதனைப்படைத்த வருடம்... என்னை காவல்துறை கைது செய்தாலும் செய்தார்கள் பாபுலாரிட்டி பவர் சோப் மாதிரி ஏறி, ஏக டிமாண்டு... தொழில் சூடு பிடிச்சி நிற்காமல் ஓடுது... கட்சியில வேற செர்ந்து அங்கேயும் களபணிய தொடங்கியாச்சு... இனி எல்லாம் வெற்றிதான்...

பாரதிராஜா: காரசாரமில்லா வருடம்... எந்த பிரச்ச்னையும் பெரிதாகி மேடை ஏறி மைக் பிடித்து யாரையும் திட்டவும் இல்லை... பாராட்டவும் இல்லை... கொந்தளித்து, கோபப்பட்டு நான் கொடுக்கும் பேட்டி தொலைகாட்சியில் வெளிவராத வருடம் ஒரு வருடமா... இதை என் இனிய‌ தமிழ் மக்கள் எ‍ப்படி ரசிப்பார்கள்...

வாசன்: காணாப்போன வருடம்... கேபினெட் அமைச்சரானதை தவிர வேறெதும் சொல்லிக்கொள்ளும்படியா இல்லாத வருடம்.. அப்பாவ மாதிரி பாக்கு போட்டு மென்னும் பார்த்துட்டேன்... எல்லோரும் ஒதுங்கியே போராங்க... இந்த பத்திரிக்கைகார‌ங்க கூட அப்பாவை கிண்டலடிச்ச மாதிரி ஒரு கார்ட்டூன் கூட என்ன வச்சு வரைய மாட்டங்கறாங்க...

அழகிரி: ஆப்பு வாங்குன வருடம்... அடங்காம திரிஞ்சுகிட்டிருந்த என்னை கொண்டாந்து கெமிக்கல் கொடுத்து உட்கார வைச்சுட்டாங்க... பாவிங்களா பார்லிமெண்டுல பக்கத்துல இருக்குறவன் என்ன பேசுறான்னே தெரிய மாட்டேங்குது... இதுல பதில் வேற சொல்லச்சொல்றாங்க... யாருக்கு யாருடா பதில் சொல்றது... ஏய், சிங்கத்த கொண்டாந்து இப்படி அசிங்கம் பண்ணிட்டீங்களேடா...

ஸ்டாலின்: செழிப்பான வருடம்... அண்ணனுக்கு அல்வா கொடுத்து டெல்லி அனுப்பி வைச்சுட்டு பதிலா எனக்கு துணை முதல்வர் பதவி வாங்கி கொடுத்த வருடம்... எப்படி மறக்க முடியும்... அடுத்த வருடம் அப்பா ரிட்டையர்டு ஆனதும் நான்தான் முதல் மந்திரி... அது வரைக்கும் கெமிக்கல் லீக் ஆகாமப் பார்த்துக்கனும்...

கனிமொழி: அல்வா கொடுத்த வருடம்... டெல்லியில மந்திரியாயிடனும்னு அப்பாவை சக்கர நாற்காலியில வச்சு தள்ளிகிட்டு டெல்லி முழுதும் சக்கரமா சுத்தினது பார்த்து ஊர் எல்லாம் சிரிச்ச வருடம்... கடைசியா சோனியாஜி பான்பராக் கொடுத்து அனுப்பி வைச்சுட்டாங்க... இனி தமிழ் ஈழத்தப் பத்தியும் அதிகமா பேசியும் நூல் விட முடியாது... கஷ்டம்தான்...


கார்த்திக்: டவுசர் கழண்ட வருடம்... காணாமற்போனவன கூப்பிட்டு கல்ல‌ மிட்டாய் வாங்கி கொடுத்த கதையா சும்மாயிருந்தவன தூண்டிவிட்டு கட்சி ஆரம்பிக்க வச்சு காணாம பண்ணிட்டாங்க... தொப்பியை கழட்டி தூரவீசிட்டு மறுபடியும் நடிக்க ஆரம்பிச்ச வருடம்.. கட்சியை கடவுள் தான் காப்பத்தனும்...

ரஜினி: குழப்பும் வருடம்... போன வருஷ‌ம் நம்ம விட்டு போன வருஷம்... வர்ற வருஷம் இனுமே வரப்போற‌ வருஷம்... போனது போனதுதான்... வர போறதும் போகப்போற வருஷம் தான்... என்ன குழம்பிட்டீங்களா... குழம்புனா தான் தெளிவு கிடைக்கும்... நல்லா குழம்புங்க... அடுத்த வருசம் பெண் சிங்கம் நூறாவது நாளுக்கு கூப்பிடுவாங்களே, அங்க போய் என்ன பேசற‌துன்னு பாபாஜிதான் சொல்லனும்...

கமல்: சர்வதேசம் இல்லாத வருடம்... இங்க யாரும் சர்வதேச தரத்தோட படம் எடுக்கறதில்லை... எல்லாம் குப்பை... நம்ம நிறைய ஆங்கில படம் பார்க்கனும்... நாம் ஜேம்ஸ் காமரூனுக்கும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கும் இணையா படம் எடுக்கனும்... சர்வதேச கலாச்சாரத்தோட இருக்குற என் வாழ்க்கையை இங்க கண்டபடி பேசறாங்க... அது மாறனும்... நான் மாத்துவன்... அது தான் எனக்கு நல்ல வருஷம்...

விஜய்: கட்டம் கட்டிய வருடம்... கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லி வாயதொறந்து, வாயில வாய்புண்ணு வந்தது தான் மிச்சம்... இந்த ராகுல்காந்தி வேற இங்க வந்து கடுப்பேத்திட்டு போயிட்டார்... வேட்டைக்காரனும் கோட்டைவிட்டுருச்சு... இப்படியே போன மூட்டை தூக்க வேண்டியதுதான்...

சரத்குமார்: கடை காலியான வருடம்... பார்லிமெண்ட் தேர்தல்ல 812 வாக்குகள் வாங்கி, நான் எவ்வளவு பெரிய பில்டப் பார்டின்னு மக்களுக்கு நிருபிச்ச வருடம்... கட்சியை காலி செய்துவிட்டு அப்பாவின் காலில் விழுந்து இந்த வருசத்திலேயே ஆசிர்வாதம் வாங்கமுடியலேயேங்கறது தான் பெரிய‌ வருத்தம்...

விஜய்காந்த்: புலம்பல் வருடம்... காங்கிரஸ் எனக்கு விலை பேசுகிறது... நான் அதற்கெல்லாம் மசியமாட்டேன்... யாரோடையும் கூட்டணியில்ல... மக்களோடயும், கடவுளோடையும் தான் கூட்டணி... என்னோட கூட்டணி வைக்கனும்ன தப்புபண்ண மாட்டேன்னு எழுதி என்கிட்ட கையெழுத்துப் போட்டு கொடுங்க... மக்களோட நலனுக்காக இப்ப கூட்டணி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்... நான் சொன்னா சொன்னதுதான்... சொல்லாதது சொல்லாததுதான்..

வைகோ: சட்டை செய்யாத வருடம்... தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இந்த வருடம் எத்தனை முறை கைதானேன் என்பதை கண‌க்கெடுக்க ஆளில்லாத வருடம்... தட்டிகேட்க பேரில்லாத‌ வருடம்... பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார்... நான் அம்மா கூட்டணியில் தான் இருக்கிறேன்... கலைஞர் நாடகமாடுகிறார்... சேதுசமுத்திர திட்டம்... முல்லை பெரியார் பிரச்சனை.. ஐய்யய்யோ... சம்மந்தமில்லாம பேச ஆரம்பிச்சுட்டேனே... இது எங்க போய் முடியுமோ தெரியலயே...

Monday 28 December 2009

நீயும் ஒரு நாள்...



சுனாமி பினாமி போல வந்து சென்ற நாளை ஐந்தாவது வருடமாக கடந்த 26ந் தேதி வேதனையுடன் நினைவு கூர்ந்தது உலகம்... நாகையில் ஒரு பெண்மணி தரையில் உருண்டு, புரண்டு அழுது புல‌ம்பியது சுனாமி காட்சிகளை மீண்டும் நம் கண் முன்னே கொண்டுவந்தது... இன்னும் அதே வேகத்துடனும், உணர்ச்சியுடனும் அவரிடம் இருக்கும் அந்த சோகம் இழந்த உயிரின் அல்லது உயிர்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பையும், பாசத்தையும் கட்டவிழ்த்து காட்டுகிறது... அவர் இழந்தது கணவனாக இருக்கலாம், மகனாக இருக்கலாம், மகளாக இருக்கலாம்... அப்பாவாக இருக்காலாம், அம்மாவாக இருக்கலாம்... அது யாரென்று நமக்கு தெரியாதபோதும் அந்த சோகம் நாம்மைத் தாக்கித்தான் போனது... அந்த வேதனை நம்மை பாக்கியில்லாமல் பாதித்தது... நம் ஆறுதல் இது போன்று பாதிக்கப்பட்டவர்களின் சோகத்தை கொஞ்சமேனும் அசைத்துப் பார்க்குமேனால் அதுவே நமக்கு ஆறுதல்... சுனாமியின் போது நான் எழுதிய ஒரு கவிதை இங்கே வெளியிட்டு அதை சுனாமியில் இறந்தவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்...

வீதியெங்கும் சடலங்கள்
கரையெங்கும் பிணங்கள்
கிளைகள் தோறும் சவங்கள்!

கட்டிடங்கள் பலவும் காணவில்லை
படகுகள் எல்லாம் மொட்டைமாடியில்
வாகனங்கள் அனைத்தும் உருமாறி!

கடலில் போனவர்களை
கணக்கெடுக்க ஆளில்லை
மடிந்தவர்களின் ஜாதகத்தில்
சனி எங்கேயிருந்தான்
என்று தெரியவில்லை
கரையிலிருந்த கடவுளெல்லாம்
எங்கே போயின புரியவில்லை!

உன் கோர, கொடூர தாண்டவம்
எதன் பொருட்டு
அப்பாவிகளை அழிப்பதில் உனக்கு
அப்படி என்ன வெட்கமில்லா ஆணவம்!

தட்டிக்கேட்க ஆளில்லை
என்ற கர்வமா
தண்டிக்க மனிதரில்லை
என்ற செருக்கா
அடக்க யாருமில்லை
என்ற திமிரா!

இங்கே அழுபவர்களின்
கண்களிலும் நீர் தான்
அதில் உப்பிருக்கிறது
உன்னிடமும் நீர்தான்
அதிலும் உப்பிருக்கிறது
எப்படி நன்றி கெட்டுப் போனாய்!

உன்னை தினம் பூஜித்து
நொடிக்கொருமுறை யாசித்து
உன்னால் உண்டு உடுத்தி
உறங்கி உயிர் வாழும்
மீனவ ஜாதியை ஏன் இப்படி
கோரமாய் இம்சிக்கிறாய்
கூடயிருந்து குல நாசம்
உன் நிஜ முகமா!

அதிகாரம் இருக்கிறது என்பதற்க்காக‌
இப்படி அரசியல்வாதி போல்
துஷ்பிரயோகமும், துஷ்டப்பிரயோகமும்
செய்து விட்டாயே
இந்த‌ வேத‌ணையும், கோர‌மும் தான்
உன் ஆண‌வ‌த்திற்கு தீனியா
உன் அக‌ங்கார‌த்துக்கு உண‌வா!

துறவரம் கலைத்து
கலவரம் செய்த கடலே
என்றோ அழிக்கப்போகிறாய்
என்று தெரிந்துதான் அன்றே
உனக்கு 'பூதம்' என்று
பெயர் வைத்தார்களோ!

'தான்' என்ற அகந்தை
அழிந்துபோகுமாம்
அப்படி என்றால்
நீயும் ஒரு நாள்...!

Sunday 27 December 2009

செக்ஸில் முகாரி பாடிய என்.டி.திவாரி!



ஆந்திராவிற்கு இது அந்திம காலமோ என்னவோ, அடுத்தடுத்த அட்டாக்கில் அல்லு ஆடி நிற்கிறது... இப்போது நடந்த அட்டாக் பிரிப்பது சம்பந்தமாக இல்லை, சேர்ந்திருப்பது சம்பந்தமாக... 50லும் ஆசை வரும் என்பதை இனி 85லும் ஆசை வரும் என்று மாற்றிக்கொள்ளலாம் போல... காமத்திற்கு கண்களும் இல்லை வயதும் இல்லை என்பதை உலகுக்கு நிரூபித்திருக்கிறார் ஆந்திர மாநில கவர்னர் என்.டி.திவாரி.

இவர் அனுபவம் வாய்ந்த திறமையான காங்கிரஸ்காரர். மூன்று முறை உத்திரபிரதேசத்தின் முதல் மந்திரியாகவும், ஒரு முறை உத்திரகாண்டின் முதல் மந்திரியாகவும் இருந்திருக்கிறார். தவிர மத்திய அமைச்சராக இவர் இல்லாத முக்கிய போர்ட்ப்போலியோவே இல்லை எனலாம். தொழில்த்துறை, வணிகத்துறை, எரிவாயுத்துறை, வெளியுறவுத்துறை, நிதித்துறை என்பவை இதில் அடக்கம்... கூடவே திட்டக்கமிஷன் சேர்மன் பதவி, சரன் சிங்கின் ஜனதா ஆட்சியில் மந்திரி பதவி போன்றவைகளும் உண்டு.

ராஜிவ் காந்தி இறந்தபோது அடுத்த பிரதமர் மந்திரிக்கான போட்டியில் இவர்தான் முதலிடத்தில் இருந்தார். இவரின் போதாத காலம், நம்ம நல்ல காலம் அந்த தேர்த்லில் அவர் தோற்றதால் (நல்ல வேளை... பார்லிமெண்ட் வளாகத்தில் ஏதும் நடந்து தொலைக்காமல் போனது...) ஆலமரத்துக்கு கீழ கிடந்தவனுக்கு ஹார்லிக்ஸ் கிடைச்ச மாதிரி நரசிமராவுக்கு அடித்தது அந்த அதிர்ஷ்டம். அத‌ன்பிற‌கு அர்ஜுன் சிங்குட‌ன் இணைந்து த‌னி க‌ட்சி ஆர‌ம்பித்து, வியாபார‌ம் ச‌ரியில்லாததால் கட்சி க‌டையை மூடிவிட்டு சோனியாகாந்தி தலை‌மையில் மீண்டும் காங்கிர‌ஸில் இணைந்து க‌வ‌ர்ன‌ர் ப‌த‌வியை வ‌ங்கிக்கொண்டு ஆந்திராவிற்கு வந்து சேர்ந்தவர்.

இப்படிப்பட்டவர் மூன்று பெண்களுடன் கொஞ்சி குழாவி சல்லாபத்தில் இருந்த  காட்சிகளை எப்படியோ சுட்டு உலகத்துக்கு காட்டி புண்ணியத்தை வாங்கிக்கொண்டது ஏபிஎன் ஆந்திர ஜோதி சேனல்... தெலுங்கானா தெலுங்கானா என்று பித்துபிடித்து தெரு தெருவாய் திரிந்தவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த மூன்று பெண்களும் கவர்னர் மாளிகைக்கு வேலைக்காக எடுக்கப்பட்டவ‌கள் (எந்த வேலைக்கு...) என்கிறது மாளிகை வட்டாரம்... ஆனால் இவர்கள் விபசார தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதும், அவர்களை மாளிகைக்கு அனுப்பி வைத்தது திவாரியின் சொந்த ஊரான உத்ரகாண்டை சேர்ந்த ராதிகா என்பதும் வெளியுலக செய்தி. இந்த ராதிகா எப்போது ஆந்திரா வந்தாலும் அவருக்கு கவர்னர் மாளிகைத்தான் கெஸ்ட் ஹவுஸாம்( அட கஷ்டகாலமே...). ராதிகாவுக்கு கல்குவாரி குத்தகையை எடுத்து தருவதாக திவாரி கூறியிருக்கிறார், ஆனால் அதை செய்யாமல் இழுத்தடித்ததால் கோபத்தில் இருந்த ராதிகாதான் இந்த வீடியோ எடுக்க ஏற்பாடு செய்தவர்... இதை தனியார் தொலைக்காட்ச்சிக்கு கொடுக்கப்போவது தெரிந்து மிரட்டியிருக்கிறது திவாரி குரூப், அதையும் மீறி இதை அந்த தனியார் தொலைக்காட்சிக்கு தாரைவார்த்திருக்கிறார் ராதிகா அம்மணி.

அந்த மூன்று பெண்களில் ஒருவர் கர்ப்பவதியாம் (இதெல்லாம் அடுக்குமா திவாரி) இந்த விசயத்தில் கவர்னரின் தனி அதிகாரி (இப்ப தான் தனி அதிகாரின்னா என்னாங்கற அர்த்தமே புரியுது) அரவிந்த் சர்மாவுக்கும் தொடர்பு உண்டாம் (என்ன மாதிரி தொடர்புன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க‌ அரவிந்த்...). இன்னும் இதில் எம்பி, எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு இருக்காம் (இவர்களுக்கு எதில் தான் தொடர்பில்லை) இவரை சந்திக்க யாரும் மாளிகை வந்தால், திவாரி 'அந்த' அறையிலிருந்து வந்து தான் சந்திப்பாராம்... சந்திப்பு முடிந்தாதும் திரும்பியும் அங்கே சென்று விட்ட இடத்திலிருந்து முகாரியை தொடருவாராம்... (என்ன பாஸ்... தமிழக இளைஞர்களை தன் சேவையால் ரட்சித்துக் கொண்டிருக்கும் சேலம் சித்த வைத்திய சிரோன்மணி தாத்தாவிடம் ஏதும் லேகியம் வாங்கி சாப்புடுறீங்களா என்ன...)



சமீபத்தில் முன்னால் மத்திய மந்திரி ஷேர் சிங்கின் 29 வயது பேரன் ரோகித் சேகர் தான் திவாரியின் மகன் என்றும் (கர்மமடா சாமி... இதே வேலையாத் தான் இருந்திங்களா திவாரி சார்... இன்னும் உங்க குப்பையை கிண்டுனா என்னென்ன வரப்போகுதோ...), இதை மரபணு சோதனையின் மூலம் நிரூபிக்கத் தயார் என்றும் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரோகித் 18 வயதை கடந்து விட்டதால் அந்த‌ வழக்கை தள்ளுபடி செய்த்து நீதிமன்றம்... (என்ன நீதியிது... 18 வயது ஆகிவிட்டால் இழைக்கப்பட்டால் அநீதியும், உண்மையான தந்தை யார் என்பது பற்றிய நீதியும் மறைக்கப்பட்டு விடுமா...) தலை தப்பியதடா சாமி என்று நிம்மதியாக பெருமூச்சு விட்டவர், மாநில‌மே தெலுங்கானாவில் ஆட்ட‌ம் க‌ண்டு நிற்க, அதுபற்றியெல்லாம் கவலையின்றி  தன் ஆட்டத்தை தொடர்ந்தார்... அப்படி இருந்தவரைத் தான் நடுதெருவில் கொண்டுவந்து நிறுத்தி கும்மியடிக்க வைத்து விட்டார் ராதிகா.

தெலுங்கானாவை விட்டு விட்டு இந்தப் பக்கம் கவனத்தை திருப்பலாம் என்று ஆந்திர எதிர்கட்சிகளும், மாதர் சங்கங்களும் எத்தனித்து, உருவ பொம்மை எரித்து, போராட்டம் தொடங்கியதுமே உடல் நிலை(!) சரியில்லை என்று கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் திவாரி... சரி, இத்தோடு முடிந்து விட்டதா இந்த பிரச்சனை என்பது தான் கேள்வி... சாதாரண ஒருவன் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஆதாரத்தோடு சிக்கினால் அவர்களை விபச்சாரத் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, தண்டனை வாங்கிக்கொடுக்கும் காவல்துறை... ஆனால் இங்கே வீடியோ ஆதாரத்துடன் சிக்கியிருக்கிறார் திவாரி, அவரை ஏன் கைது செய்யவில்லை... அவரின் மீது ஏன் எந்த வழக்கும் தொடரப்பட‌வில்லை... கட்சிகள் திவாரியின் ராஜினாமாவைத் தான் கேட்டார்களே ஒழிய, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய சொல்லி போராடவில்லை... ஏன்?  நியாயமும், நீதியும், சட்டமும் மனிதனுக்கு மனிதன் மாறுபடுமோ... நீங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்!

Friday 25 December 2009

தமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்!


ர‌ஹ்மான் என்னும் புய‌லின் வேக‌த்துக்கு ஈடுகொடுக்க‌ முடியாம‌ல் த‌டுமாறுகிற‌து இசை... இதையும் வாங்கிச்செல்லுங்க‌ள் என்று அவர் வீட்டு வரவேற்பறைவயில் வ‌‌ந்து காத்திருக்கின்ற‌ன‌ விருதுக‌ள்... இவ‌ரை ம‌ட்டும் அணைத்து அணைத்து காதலிக்கிறது புக‌ழ்... எங்க‌ளையும் கொஞ்ச‌ம் சீண்டிப்பாறேன் என்று நெருங்கி நெருங்கி வ‌ந்து ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிற‌து ஆணவ‌மும், அக‌ந்தையும்... இங்கே உய‌ர‌ம் கூட‌ கூட‌ அட‌க்க‌ம் கூடுகிற‌து... க‌ட‌மை ஏற‌ ஏற‌ பொறுமை ஏறுகிற‌து... இவ‌ரை ஒன்றும் செய்ய‌முடியாது என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்க்கிற‌து வேத‌ம் ஓதும் சாத்தான்.

தமிழகத்தில் பிறந்து, தமிழில் பேசி சந்தோசப்பட்டால் மட்டும் போதாது, அதை மேன்மேலும் உயர்த்துவது எப்படி என்று சர்வ காலமும் யோசிக்கிறார் அவர்... அதனால் தான் ஒரு ஆங்கில படத்தில் ஒரு தமிழ் பாட்டை புகுத்தி அசால்ட்டாக ஒரு அசாத்தியமான செயலை செய்திருக்கிறார்...

உலக திரை துறையினரின் உயரீய கனவு என்பதைவிட எட்டமுடியாத கனவு ஆஸ்கார்... அந்த ஆஸ்கார் விருது வாங்க அரங்கத்தின் பிரமாண்டமான மேடையில் ஏறிய இந்த தமிழன் பேசிய வார்த்தைகள் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே...' என்று தமிழில்... சுத்த தமிழில் கூறிவிட்டு, ஆனந்த விகடனில் அட்டைப்படமாக வந்தாலே ஆண்டுகணக்காய் அலப்பரையை கொடுக்கும் நம்ம ஆட்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு அப்பவும் அடக்கமாகத் தான் கைகட்டி நின்றார்... இதை காதில் கேட்ட அடுத்த நிமிடமே அனைத்துலக தமிழர்களின் காதுகளிலும் கனகாம்பர வாசனை வீசியது உண்மை... மயிற்கால்கள் சிலிர்த்து குத்திட்டு நின்றது உண்மை... சுற்றியிருப்பவர்களுக்கு புரியுமா, புரியாதா... என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எந்த யோசனையும், தடுமாற்றமும் இல்லை இந்த தமிழனிடம்...  அந்த இடத்தில் அப்படி பேசிவிட ஒரு பொதுவான மொழி தாண்டிய கலைஞனுக்கு எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும் என்பதை நினைக்கையில் பிரமிப்பு வருவது இயற்கை...  அவர் குறிக்கோள் ஒன்றே ஒன்று தான், அது தமிழுக்குப் பெருமை சேர்ப்பது.

இவர் நமக்கு தமிழில் வரமாய் தந்திருக்கும் 'வந்தே மாதரம்...' வரலாற்றில் பதிந்து போன ஒன்று. 'தாய் மண்ணே வணக்கம்...' என்ற மயக்கும் குரலும், மந்திர வார்த்தையும், மண‌க்கும் இசையும் கருவிலிருக்கும் குழந்தையைகூட கவர்ந்திழுக்கும் அற்றல் பெற்றது... சுபாஸ் சந்திரபோஸ் கையில் மட்டும் இது அப்போது கிடைத்திருந்தால் இன்னும் சில வருடங்களுக்கு முன்னமே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்பது திண்ணம்.



எவ்வளவோ வேலை பளுவுக்கு மத்தியிலும் யாருடைய துணையுமில்லாது தன் சொந்த முயற்சியில் இதய பூர்வமாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்... அது திருக்குறளை இசை வடிவமாக்குவது... ராப் பாடகர் ப்லேஸ்ஸும் இதில் இணைந்திருக்கிறார்... இவர் 'சிவாஜி த பாஸ்' பாடியவர்... VH1 சேனலில் பாடிக் கொண்டிருக்கும் முதல் இந்தியர்... இந்த முயற்சிக்கு ர‌ஹ்மான் சொல்லும் காரணம் 'திருக்குறளின் பெருமையை அதன் தொண்மை மாறாமல் அடுத்த தலைமுறைக்கு எளிதாக எடுத்து செல்ல‌ வேண்டும்...' என்பது தான். அரசியல்வாதிகள் கவனிக்க, 'அடுத்த தேர்தலில் ஜெயித்து விட...' என்பது போல் உங்கள் காதுகளில் ஏதாவது தப்பாக விழுந்து தொலைக்கப்போகிறது... மனிரத்தினத்தையும், வைரமுத்துவையும் அழைத்து ஆல்பத்தை போட்டு காட்டியிருக்கிறார் ரஹ்மான்... அதன் இறுதி வடிவம் சீக்கிரம் வந்து விடும்... இது வெளிவரும் நாளில் இளைஞர்கள் திருக்குறள் பக்கம் திரளுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் அந்த ஆங்கில படத்தில் தமிழ் பாடல்... படத்தின் பெயர் கப்புல்ஸ் ரீட்ரெட்... இதன் இயக்குனர் பீட்டர் பில்லிங்ஸ்லி... படத்தின் ஒரு காட்சிக்காக இவர் ரஹ்மானிடம் கேட்டதோ ஏதாவது ஒரு ஆப்பிரிக்க ரக பாடலை... ரஹ்மான் கொடுத்ததோ கலப்படமில்லாத சுத்தமான ஒரு தழில் பாடலை... ரொமான்டிக் மெலொடியான அந்த பாடலை இசையோடு சேர்த்து எழுதியதும், பாடியதும் ரஹ்மானே... இந்த பாடலை கேட்ட இயக்குனர் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை... கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த பாடல் படத்தின் வெற்றிப்பாடல் ஆகிவிட்டது.


மஹாராஷ்ட்ராவில் மாட்டு வண்டி கவிழ்ந்ததை மறுநாள் மத்தியானம் வரை காட்டி, மாட்டு வண்டிகாரனிடம் மாஞ்சி, மாஞ்சி பேட்டியெடுத்து எக்ஸ்குளூசிவ் என்று போடுவதும், இந்த மட்டுவண்டி விபத்து நடக்கும் என்று நேற்றே தெரியும் என்றும், இதற்காக ஆளும் கட்சி மந்திரியையும், எதிர்கட்சி எம்பியையும் உட்கார வைத்து யாரை பதவி நீக்கம் செய்யலாம் என்று காரசாரமாய் விவாதிக்கும் NDTV, CNN IBN, Times Now போன்ற‌ ஆங்கில டிவி வகையராக்கள், அன்று உலக அதிரடி நாயகன் ஜாக்கிஜான், உலக நாயகன் படத்துக்காக சென்னை வந்தபோது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை... பிரத்தியேமாகவெல்லாம் இதை காட்டவில்லை... வெரும் செய்தியாகத்தான் காட்டினார்கள்... தமிழ் வளர்வது எப்போதும் அவர்களுக்கு பிடிக்காது, அதன் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் அவர்கள் ரஹ்மானிடம் வயிற்றெரிச்சலில் கேட்ட கேள்வி 'எதற்காக ஆங்கில படத்தில் தமிழ் பாடல் போட்டீர்கள்...' என்பது தான்.

உள்ளூர் கதையை முதலில் பாரு, வெளியூர் கதையை அப்புறம் பார்க்கலாங்கற மாதிரி, ரஹ்மான் விசயத்தில் நம்மூர் அரசியல்வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள்... உளியின் ஓசையின் சிற‌ந்த‌ வ‌ச‌ன‌க‌ர்த்தா விருது உட்ப‌ட‌ எந்த‌ விருது என்றாலும் மெள‌ண்ட் ரோட்டில் மாநாடு ந‌ட‌த்திவிடுகிற‌ க‌லைஞராக‌ட்டும், க‌ட்சியை களைத்து விட்டு கொட‌நாட்டில் குடியேறிவிட‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் இருப்ப‌துபோல் தோன்றும் புரட்சித் தலைவியாகட்டும், தமிழ், த‌மிழ் என்று தின‌ம் வாயல் த‌ண்டால் எடுத்து கொண்டிருக்கும் ம‌ருத்துவராகட்டும், ஆஸ்கார் என்கிற‌ அசாத்திய‌ உய‌ர‌த்தை எட்டிவிட்ட‌ ஒரு த‌மிழ‌னை இவ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ளாத‌து ஏன்? விழா எடுத்து கெள‌ர‌விக்காத‌து ஏன்? ஒருவேளை ர‌ஹ்மான் அர‌சிய‌லுக்கு வ‌ந்து விடுவாரோ என்கிற‌ அவ‌ச‌ர‌ புத்தியா... வ‌ள‌ர்த்து விட்ட‌வ‌ர்க‌ளெல்லாம் த‌லையில் ஏணியில்லாமல் ஏறி ஆணி அடிக்கிறார்களே அது போல இவரும் ஏதும் செய்துவிடுவார் என்று பயமா... எந்த கண்றாவியாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சொல்... தழிழுக்காக பேசுவதை நிறுத்துங்கள்... ரஹ்மானைப்போல் சத்தமில்லாமல் செய்து காட்டுங்கள்.

அல்லா ரெக்கா ரஹ்மான் நலமுடன் பல்லாண்டு வாழவேண்டும்,  மென்மேலும் வளரவேண்டும்... தமிழ் அவரால் இன்னும் பல உச்சிகளை தொட வேண்டுமென மார்கழி வாழ்த்துகிறது... நீங்க‌ளும் வாழ்த்துங்க‌ள், வாழ்த்து வாழ‌ வைக்கும்!

அந்த ஆங்கில படத்தின் ரஹ்மானின் தமிழ் பாடல் கீழே:

குறு குறு கண்களிலே... எனை அவள் வென்றாலே
குறு குறு கண்களிலே... எனை அவள் வென்றாலே

இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...

சிறு சிறு பெண் நிலவே... என் துணை ஆவாயோ
சிறு சிறு பெண் நிலவே... என் பசி தீர்ப்பாயோ

இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...

குறு குறு கண்களிலே... இதோ இதோ அவள்...

Tuesday 22 December 2009

வாங்க... பஜ்ஜி சாப்பிடலாம்!



அலுத்த நேரத்தில் ரோட்டோர டீக்கடைகளில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே டீ குடிப்பவரா நீங்கள்... அப்படின்னா வங்க, இது உங்களுக்குத்தான்.

வழக்கம் போல அன்றும் சாயங்கால நேரத்தில் அலுவலக நண்பர்களுடன் பக்கத்து கடைக்கு டீ சாப்பிட சென்றோம்... 'என்ன ஆனாலும் இன்று பஜ்ஜி மட்டும் சாப்பிட்டு விடக்கூடாது...' என்று சக்தி வினாயகர் தலையில் சத்தியம் செய்துவிட்டுத்தான் எப்போதும் கடைக்குள் செல்வது வ்ழக்கம்... என்றாலும் கடைக்குச் சென்றவுடன், வாசலில் நின்றுக்கொண்டு வருத்தமே இல்லாமல் வாங்கித் தின்று கொண்டிருப்பவர்க‌ள் நம் கண்ணில் பட்டு கொஞ்சம் கலங்க வைப்பார்கள்... அதையும் மீறி கட்டுக்கோப்போடு உள்ளே சென்று அவசர அவசரமாக டீ போட சொல்லி விட்டு கத்திருந்த வேலையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது... கடைக்காரர் எங்களைப் பார்த்து 'பஜ்ஜி சாப்பிடுங்க சார்... நல்லா சூடா இருக்கு...' என்றார். வேண்டா வெறுப்புக்கு 'ஏண்டா கேட்டாய்...' என்பது போல் அவரை திரும்பி பார்த்தாலும், 'எப்படா கேட்பான்...' என்று எதிர்பார்த்து கத்திருந்த அடிமனது எகிறி குதித்தது.

அடிமனது எண்ணங்களை அசிங்கப் படுத்திவிடக்க் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் ஒருமுறை பஜ்ஜிப்பக்கம் திரும்பினால், அது பர்தா போடாத பருவ மங்கைப் போல பளபளவென நம்மைப்பார்த்து கண் சிமிட்டியது... சரி தான் என்று கட்டுப்பாட்டை உடைத்தெரிந்துவிட்டு இன்னைக்கு ஒருநாள் சாப்பிட்டு தொலைப்போம் என்று ஒரு பஜ்ஜியை கையில் எடுத்தேன்... கூட வந்த நண்பர்களில் கனிகண்ணனைத் தவிர ஜேபியும், சந்த்ருவும் என்கூட சேர்ந்து கொண்டார்கள். நான் அதற்காகவே வைக்கப்பட்டிருந்த துண்டு பேப்பர்களில் ஒன்றை எடுத்து பஜ்ஜியை அதனுள் சுருட்டி அமுக்க ஆரம்பித்தேன்... செக்கில் எண்ணை பிழிவது மதிரி காகிதத்தை கடந்து வெளியே வந்தது எண்ணை... வரலாற்று சிறப்புமிக்க அந்த பஜ்ஜியில் எண்ணைப்பிழியும் செயலை செய்து முடித்து, பஜ்ஜியை ஒரு வாய் கடித்தேன்... அதுவரை நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கனிகண்ணன் அதற்காகவே காத்திருந்தவன் போல மெதுவாக வாய் திறந்தான்.



'ஏன் சபா... இந்த பேப்பர எடுத்து இந்த அமுக்கு அமுக்குறீங்கள... இதுக்கு முன்ன இந்த பேப்பர் எங்க இருந்ததோ... எப்படி இருந்ததோ... என்னவா இருந்ததோ...'  என்று ஆரம்பித்தான்.

'என்ன சொல்ல வர்ற இப்போ...' என்றேன் சாப்பிடுவதை நிறுத்தாமல்.

'இல்ல... உங்க வீட்லயும் பேப்பர் வாங்கறீங்களே... நீங்க அத எப்படியெல்லாம் யூஸ் பண்றீங்க... கடைசியா அத‌ மடிச்சி பக்குவமா கடையில போடறீங்களே, அது தான் இங்க வந்து சேருது... காலையில கூட எங்க ரூமுக்கு வர்ற பேப்பர எடுத்து நான் என்ன துடைச்சேன்னா...' என்று மேலும் விடாமல் லந்து கொடுத்தவனை, ராங் நம்பர் வந்த மொபைல் போனை கட் செய்வது மாதிரி சட்டென கட் செய்தேன்... ஒருத்தன் பஜ்ஜி சாப்புடறது குத்தமாடா... அதுக்கு இந்த‌ அள்வுக்கு ஆராய்ச்சி தேவையா... இவ‌னையெல்லாம் ஆள‌ வைச்சு ஆப்கானிஸ்தானுக்கு க‌ட‌த்த‌னும்னு மனசுல நினைச்சுக்கிட்டேன்... கண்டவன் சொல்ற கண்டதையும் கேட்டுக்கிட்டு அதுக்காகவெல்லாம் நாம நம்மை மாத்திக்கமுடியாது என்று ஜேபியும், சந்துருவும் எடுத்த பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டாலும் என்னைப்போலவே செம கடுப்பில் தான் இருந்தார்கள்... மவனே... நீ மாட்டு, உன் மண்டையுலேயே மாண்டலின் வாசிக்கலன்னா பார்த்துக்கோ என்று கர்வத்தை வளர்த்துக்கொண்டோம். (ஜேபியும் இதேபோல ஒரு லந்து பார்டி தான், இவர் லீலைகளை பிறகு ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்).

'போதும்... இத்தோட நிறுத்திக்க... நான் இந்த பஜ்ஜிய சாப்பிடுறது தான உனக்கு பிரச்சனை... வேண்டாம் போ...' என்றபடி மீதமிருந்த பஜ்ஜியை அருகில் படுத்துகிடந்த நாயின் முகத்தருகே தூக்கிப் போட்டேன்... நல்ல உறக்கத்திலிருந்த அந்த நாய் தன் அருகில் ஏதொ ரசாயனா அணுகுண்டு தான் விழுந்துவிட்டதோ என்று நினைத்து திடுக்கிட்டு முழித்தது... அருகில் ப்ஜ்ஜியை பார்த்ததும் தான் பயங்கர கடுப்பாகி விட்டது போல, அப்படியே திரும்பி என்னைப் பார்த்தது ஒரு முறை முறைத்தது... ஏனோ என் தொப்புலைச் சுற்றி ஊசிப் போடுவது போல் ஒரு நினைவு மனதில் தேவையில்லாமல் தோன்றி மறைந்தது.

'டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி... ஏதோ தெரியாம‌ தப்பு நடந்துப்போச்சு... கோவிச்சுக்காதிங்க... நீங்க தூங்குங்க...' என்பது போல் நான் பார்த்த பிறகுத்தான் சமாதானமாகி மறுபடியும் தூக்கத்தைத் தொடர ஆரம்பித்தது... காசியிலிருக்கும் கைலாசனாதர் மேல் சத்தியமா சொல்றேன் அந்த நாய் பஜ்ஜிய தொடவேயில்லை... அதுக்கு எதாவ‌து கொல‌ஸ்ட்ரால் பிர‌ச்ச‌னை இருக்குமோ என்று சந்தேகப்பட்டு விசாரித்த‌தில், அதெல்லாம் இல்லை, ஒரு நாளைக்கு நாலுப்பேரை கடித்து கறியை எடுக்கும் அளவுக்கு ந‌ல்ல‌ ஹெல்த்தியாக‌த்தான் இருக்கிற‌து என்று சொன்னார்க‌ள்.

'எப்படி...' என்றேன்.

'ரொம்ப சிம்பில்... அது இந்த‌ கடை பஜ்ஜியை சாப்பிட‌ற‌தே இல்லையே...' என்றார்க‌ள்

'போதுமடா சாமி... ஆளைவிடுங்க...' என்று அதற்குமேல் அங்கே இருந்தால் கீழ்பாக்கத்தில் இடம் நிச்சயம் என்பதால் உடனே அங்கிருந்து அபீட் ஆனேன்.

(பி.கு: இதற்கும் நீங்கள் பஜ்ஜி சாப்பிடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... என்றாலும் சாப்பிடுவதற்கு முன் நாயைப்பற்றி யோசியுங்கள்)

Saturday 19 December 2009

வேட்டைக்காரன் - மற்றுமொரு மசாலா!



விஜய் எட்டுக்குடி முருகனுக்கு எட்டுமுறை காவடி எடுத்து வேண்டிக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை இனி நல்லப்படம் நடிக்கவே கூடாது என்று உறுதியாக இருக்கிறார் போல... படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் பத்து நிமிடமாவது படத்தின் பாதிப்பு மனதில் இருக்க வேண்டும், ஆனால் இந்தப்படம் பார்த்தப்பிறகு அந்த பாதிப்பு எதுவும் இல்லை.

விஜய் படத்தின் கதையை பச்சபுள்ளைகிட்ட கேட்டாக்கூட பல்லுவிலக்காம பளிச்சின்னு சொல்லிடும் படம் பாக்குறத்துக்கு முன்னாடியே... இருந்தாலும் நானும் சொல்லிடறேன்... விஜய், தேவராஜ்(ஸ்ரீஹரி) என்னும் கடமை தவறாத போலீஸ் அதிகாரியின் வேலையில் கவரப்பட்டு அவரைப்போலவே போலீஸ் அதிகாரியாக வேண்டும் அன்று ஆசைப்படுகிறார்... நாலாவது அட்டம்டில் +2 பாஸ் செய்யும் அவர் தேவராஜ் படித்த அதே கல்லூரியில் படிக்க‌ சென்னை வருகிறார்... (இத்தோடு சரி, இனி அவர் அப்பா, அம்மாவை படத்தில் பார்க்கமுடியாது...) அங்கே செல்லா என்கிற ரவுடி, தான் பார்த்து, பிடித்துப்போன பெண்களை கற்பழிக்கிறார்(இதில் வேறு ஒருமுறை தொட்ட பெண்ணை அவர் மறுமுறை தொட மாட்டாராம்). அப்படி அவர் வகுப்பறைத்தோழிக்கு ஒரு சூழ்நிலை வருகிறது, அதில் தளையிட்டு செல்லாவை அடித்து துவைத்து பார்சல் செய்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பிவைக்கிறார்...

அதற்காக விஜயை கைது செய்து என்கவுண்டரில் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார் செல்லாவின் அளான போலீஸ் அதிகாரி கட்டப்பொம்மன் (ஷாயாஜி ஷிண்டே). செல்லாவின் அப்பாவான வேதநாயகம்(சலீம் கவுஸ்) விஜயை பழிவாங்க கதைக்குள் ஆஜராகிறார். அவர் தன் மகனை அடித்தவனையே தன் காரில் அழைத்துக்கொண்டு தன் வியாபார தலங்களை சுற்றிக்காட்டுகிறார்... அதை வைத்து விஜய் அவைகளையும், வேதநாயகத்தையும் எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை (அப்பாடா...).

சண்டைக் காட்சிகளில் நிறைய ஆக்ரோசம் காட்டியிருக்கிறார்... ஆனால் எந்த சண்டையும் தரையில் இல்லை... ஆகாயத்தில் பறந்து பறந்து தான்... பாடல்கள் எல்லாமே பாஸ்ட் ட்ராக் தான்... நன்றாக தாளம்போட வைக்கிறது... வழக்கம் போல‌ நடனத்தில் அசத்தியிருக்கிறார் விஜய்... இந்த இரு விசயத்தையும் பொறுத்தவரை அவர் ரசிகர்களுக்கு வேட்டைத்தான் என்பதில் சந்தேகமில்லை... (சின்னத்தாமரை பாடலுக்கு விஜய் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைல் இருக்கிறதே... கண்றாவியாக இருக்கிறது. இந்த ஸ்டைல் விஜய்க்கு நண்பர்கள் வைத்திருக்கும் பெயர் 'ஒண்டிப்புலி'. 'நான் அடிச்சா' பாட்டை கூட இப்படித்தான் பாடறாங்க, 'நான் நடிச்சா தாங்க மாட்ட.. நாலு நாளு தூங்கமாட்ட... போய்பாரு வீடு போயி சேர மாட்டன்னு...').


காமடி நடிகர்களை ஏன் தவிர்த்தார்கள் என்று தெரியவில்லை... அந்த வேண்டாத வேலையையும் அவரே செய்கிறார்.. காமடி அவருக்கு வரும் தான் என்றாலும் இந்த படத்தில் அவ்வளவாக சிரிப்பு வரவில்லை என்பது தான் உண்மை.



அனுஷ்கா வருகிறார்... சிரிக்கிறார்... அழுகிறார்... முடிந்த அளவுக்கு உடம்பை காட்டுகிறார்... நடனமாடுகிறார்... நடிக்கிறாரா என்றால் அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை இயக்குனர் பாபு சிவன், அந்த மாதிரி தர்மசங்கடங்களை கொடுக்காமல் இருந்ததற்க்கு அவர் இயக்குனருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்... அதற்கு மேல் ஒன்றுமில்லை அவரைப்பற்றி சொல்ல.

முழுசாய் மூன்று மணி நேரத்தை முழுங்கி ஏப்பம் விடுகிறது படம்... முதல் பாதி அப்படி, இப்படி ஜாலியாகப் போய்விடுகிறது, அதற்காக இயக்குனரை பாராட்டலாம்... இரண்டாவது பாதியிருக்கிறதே... அப்பப்பா... அங்கிருந்து தப்பித்து நாம் வெளியே வந்துவிட்டால் மாசானி அம்மனுக்கு கோவிலுக்கு போய் மாவிளக்கு போட்டு அதற்கான வேண்டுதலை நிறைவேத்தலாம். இடையிலேயே வில்லன் 'ஹீரோ பெரிய ஆள்...' என்றும் அவனை நாம் ஒன்றும் பண்ணமுடியாது என்றும் ஹீரோ புகழ ஆரம்பித்துவிட்டால் அதற்குப்பிறகு எப்படி படம் விறுவிறுப்பாக போகும் என்பதை இயக்குனரிடம் கேட்டவேண்டும்.

பஞ்ச் டயலாக் என்ற பெயரில் கண்டதையும் பேசி காதில் கலவரத்தை உண்டு பண்ணுகிற வேலையை இனியும் விஜய் நிறுத்தாமல் செய்தால் காதுகள் காலாவதியாகும் சட்டத்தின் கீழ் அவர் மீது ஏதாவது வழக்கு தொடரலாமா என்று யாராவது ஓய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரிக்க வேண்டும்.

விஜய் தன் நடிப்பின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார் என்று தோன்றுகிறது. அதனால் தான் இப்படி மசாலா மேல மசாலா தடவி நம்ம மண்டையில புகுந்து மட்டன் பிரியாணி கிண்றார்ன்னு நினைக்கிறேன்... விஜய் சார், உங்களுக்கும் நடிக்க வரும்... நம்பிக்கையில்லேனா நீங்க நடிச்ச துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மாரியாதை போன்ற பழைய படங்களோட பழைய டிவிடி வாங்கி போட்டுப்பாருங்க, அப்பவாவது அது உங்களுக்கு புரியும். ரஜினிப்படம் நல்லாயில்லன்னாலே நாளைக்கு வந்து மீதிய பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு இடைவேளையோட எழுந்திருச்சி போயிடறாங்க... அதனால இனிமேலாவது நடிக்க முயற்சிப்பண்ணுங்க... பஞ்சையும், மசாலாவையும் வச்சு மீதி காலத்த ஓட்ட ட்ரை பண்ணாதீங்க.

வெயில்ல‌ வெளியே போனா வெக்கை, விஜய் படத்துக்குப் போன மொக்கை எங்கிற பார்முலாவை சீக்கிரம் மாத்துங்க மிஸ்டர் இளய தளபதி!

Thursday 17 December 2009

தெலுங்கானா - தீர்ப்பு திருத்தப்படுமா!



பிரிவு என்ப‌து எங்கேயும் க‌ஷ்ட‌ம் தான்... வீட்டில், நட்பில், உறவில், வாழ்க்கையில் என்றில்லை நாட்டிலும் கூட‌ அது பாதிப்பை ஏற்ப‌டுத்தும்... ஏற்படுத்துகிறது... ஏற்படுத்திவிட்டது... ஜீராவில் மூழுகிய‌ குலோப்ஜாமூனைப் போல‌ கிள‌ர்ச்சியில் மூழுகிக்கிட‌க்கிற‌து ஒரு மாநில‌ம். போராட்டம், கடையடைப்பு, மறியல், பஸ் எரிப்பு எனறு அவசரகதியில் சம்பவங்கள் தினமும் நடந்தபடியே இருக்கின்றன.

தெலுங்கானா விசயத்தில் இன்று ஒரு நிலைப்பாடு, நாளை ஒரு நிலைப்பாடு என்று அங்கே அரசியல்வாதிகள் அடிக்கும் அந்தர் பல்டிக்காக அவர்களுக்கு என்ன அவார்டு கொடுக்கலாம் என்று ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றன அனைத்துலக‌ யுனிவர்சிடிகளும். என்ன தின்னால் பித்தமும், சித்தமும் தெளியும் என்று தெரியாமல் திணறி திண்டாடி தெருவில் வந்து ஒப்பாரி வைக்கின்றன எல்லா கட்சிகளும். தெலுங்கானாவை பிரிப்பதா, சேர்ப்பதா என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு பெரிய கவலையோ, வருத்தமோ கிடையாது... இதனால் இவர்கள் கட்சிக்கு எதிர்காலத்தில் ஏற்ப்படப்போகும் நன்மை தீமைகளைப் பற்றித்தான் இவர்களின் கவலை... அல்ஜீப்ராவிலும் வகுத்தும்,  கால்குலசிலும் பெருக்கியும், ட்ரிக்னாமன்ரியில் கழித்தும் இவர்கள் கணக்குப் போட்டு போட்டு, அடிக்கும் வெள்ளத்தில் அடித்துப்போய்விடாமல் தங்களை காப்பாற்றிக் கொள்ள‌ அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ராயல்சீமா மற்றும் கடலோர ஆந்திர எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்... அவர்களுக்குத் தெரியும் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று. காரியம் செய்ய காசிக்குப் போனாலும் காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் ஆயிற்றே அரசியல்வாதிகள்... கொடுக்கத் தெரியாதவன் கொல்லிவாய் பிசாசிடம் கொடுத்து வைத்த கதையாக வாயால் வக்குறுதியை கொடுத்துவிட்டு ஆலையில் மாட்டிய ஆலைக்கரும்பாக சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு. மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக ஆரம்பத்தில் கூறிய காங்கிரஸ்காரர்கள் இப்போது குய்யோ, முறையோவென்று குதிக்கிறார்கள்... நேற்று முதல்வர் ரோசையா இங்கே நல்லது நடக்க கடவுள் தான் நல்வழி காட்டவேண்டும் என்று புலம்பியிருக்கிறார்.. மத்தியில் ஆளும் தன் கட்சி இனி நல்வழி காட்டாது என்று முடிவுக்கு வங்துவிட்டார் போலிருக்கிறது.

சிரஞ்சீவி நன்கு நாட்களுக்கு முன் வரை தனி தெலுங்கானா என்று கோசமிட்டார். நெற்றிலிருந்து ஒன்றுபட்ட தெலுங்கானாவிற்க்காக போராடப் போவதாக கூறி தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்... சினிமாவில் காட்சிகளை மாற்றுவதுபோல இங்கேயும்... இன்னும் எத்தனை காட்சிகளோ... சந்திரபாபு நாய்டு அதிகமாக வாய் திறப்பதில்லை.. அடுத்து என்ன செய்யலாம்... என்ன பேசலாம்... எந்த பக்கம் சாயலாம் என்று அறிவியல் கூடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக கேள்வி... சோனியாவும், மன்மோகன் சிங்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று அவர்கள் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார் தொடர் ஆட்ட நாயகன் சந்திரசேகர ராவ்...  மாநிலம் முழுதும் பற்றி எரிகிறது... பதட்டத்தில் இருக்கிறது..வாந்தி எடுத்தவனுக்குத் தான் வயித்துப்புண்ணுங்கற மாதிரி ஆட்டம் பாமின் பட்டனை அழுத்திவிட்டு விட்டு அமைதியாய் வாய் மூடி வேடிக்கைப்பார்க்கிறது மத்திய அரசு.



நேரு காலத்தைய மாநில மறு சீரமைப்பு ஆணையம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, இரண்டையும் தனித் தனி மாநிலங்களாக அமைப்பதே நல்லது என, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. 1956 நவம்பர் 1ல், தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் இணைத்தது. அப்போது போடப்பட்ட ஜென்டில்மேன் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வருடங்களுக்கு பின் தெலுங்கானாவின் வளர்ச்சி, ராயல்சேமா மற்றும் கடலோர ஆந்திர மாவட்டங்களை விட பின்தங்கி இருந்தால் மீண்டும் தனி மாநிலமாக பிரித்துக்கொள்ள முடிவெடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஆரம்பித்தது  பிரச்சனை.. அன்றிலிருந்து போராட ஆரம்பித்தவர்கள் தான்... இதுவரை 390க்கும் மேற்ப்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்... அதில் நிறைய பேர் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள். தற்ப்போது நிலமையை ஆராய்ந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, குடிநீர் வசதி என்று அனைத்துத்துறைகளிலும் ஆந்திராவைவிட பின்தங்கியே இருக்கிறது தெலுங்கானா... கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன என்றாலும் இன்னும் பல கிராமங்கள் குடிநீர் வசதி கூட இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள்.

இதற்கு தெலுங்கானாவை தனியாக பிரிக்காமலேயே,  தெலுங்கானா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒப்பந்தங்கள் பற்றி யோசித்திருக்கலாம், தெலுங்கானாவிற்கு சிறப்பு சலுகைகளை வழங்கி இருக்கலாம், சதவீத அடிப்படையை மற்றியமைத்திருக்கலாம்... காரணம் இந்த பிரிவு நிச்சியம் ஒட்டுமொத்த ஆந்திராவின் வளர்ச்சியை பாதிக்கும்... அனைத்து வசதிகளும் கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிடுக்கும் ஐதராபாத்தை விட்டு விட்டு தனி தலைநகரம் அமைத்து மீதமுள்ள் 12 மாவட்டங்களும் இனி தலையெடுப்பது என்பது சாதாரன விசயமில்லை... அதற்கு 20 அல்லது 25 வருடங்கள் வரை ஆகலாம்... சதீஸ்கர் மற்றும் உத்ராஞ்சல் போலத்தான் வளர்ச்சி இருக்கும்... கூடவே இன்னொரு அபாயமும் இருக்கிறது, அது ராயல்சீமாவும் தனி மநிலம் கேட்டு கொண்டிருக்கிறது... அவர்கள் தங்கள் போராட்டங்களை பெரிதாக்கலாம்.

தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் பட்சத்தில், ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என, ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களையும் திருப்திபடுத்த நினைத்து ஐதராபாத்தை  யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் பட்சத்தில் தெலுங்கானாவும் அவ்வளவு சீக்கிரத்தில் வளர்ச்சி பெற்றுவிட முடியாது. அதற்கும் அதே வருடங்கள் ஆகும் வெளியுலகத்தை திரும்பிப்பார்க்க‌‌‌. மொத்தத்தில் இந்த பிரிவு வரும் பட்சத்தில் ஆந்திராவுக்கே நேரம் சரியில்லை என்று தான் தெரிகிறது. இப்போது நடக்கும் கிளர்ச்சியை காரணம் காட்டி மத்திய அரசு தங்கள் முடிவை வாபஸ் வங்கிக்கொள்ளும் சாத்தியமும் இருக்கிறது என்றாலும் நிறையவே யோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும் சோனியாஜி!

இது இப்படி இருக்க உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலம் கிடைத்துவிடும் என்று தங்கள் மாநிலங்களை பிரிக்கச்சொல்லி நிறைய பேர் நாடு முழுதும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்... உணவுக்கு ஹோட்டலுக்குப் போகலாம், தென‌வுக்கு போகவேண்டிய இடம் வேற‌யாச்சே... அண்ணன் எப்போ போவான் தின்னை எப்ப காலியாகுங்கற மாதிரி தமிழ் நாட்டிலும் பிரிவினையைப்ப்ற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள், ராமதாஸும், மூவேந்தர் முன்னேற்றக்கழக சேதுராமனும்... பிரித்துவிட்டால் ஏதோ இவர்கள் தான் ஆட்சி அமைக்கப்போவது மாதிரி... இதற்கு எதிர் குரல் கொடுத்திருக்கிறார் முதல்வர்... நல்லவேளை நாம் தப்பித்தோம்... அது தான் சரி என்று சொல்லி தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து ஸ்டாலினுக்கு சென்னையையும், அழகிரிக்கு மதுரையையும் கொடுத்துவிட்டால், ஒட்டுமொத்த குடும்ப பிரச்சனையும், கட்சி பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று களத்தில் இற‌ங்காமல் இருந்தாரே அது வரைக்கும் அவருக்கு கோடனுகோடி நன்றி!

Tuesday 15 December 2009

தோழனாகவா... காதலனாகவா...



நாலிரெண்டு மாதங்கள் அயிற்று
நம் முதல் சந்திப்பு நிகழ்ந்து
மற்றொரு நட்பு உன்னை
எனக்கு அறிமுகப்படுத்திய
அந்த நாள் தான் இதுவரை
என் வாழ்வில் இனிய நாள்!

நீ கை கொடுத்தாய்
நானும் கை கொடுத்தேன்
உடலில் ரசாயன மாற்றம்
உயிரில் மின்சார தாக்கம்!

கைகள் பிரியும் போதுதான்
உன் கண்களை கண்டேன்
பார்வையா அது
பாதரசத்தின் ஒலி
அக்னியின் அனல்
அணுவின் கதிர் வீச்சு
அன்றிலிருந்து அதுவே
ஆனது என் உயிர் மூச்சு!

அதன் பிறகு
நான் பார்க்கும் போது நீயும்
நீ பார்க்கும் போது நானும்
பார்க்கமுடியவில்லை நம்மால்!

நீ தூர இருக்கையில்
துடிப்பாய் ரசிக்கின்றேன்
நெருங்கி வருகையில்
நெருப்பில் குளிர்கிறேன்!

உன் சபீமம் தான்
என்னை சடமாக்குகிறது
உன் அருகாமை தான்
என்னை அடக்கி வைக்கிறது!

உன் பார்வையை சந்திக்கும்
கடினமான செயலை
என்னால் செய்யமுடியவில்லை
உன் பேச்சை அறுத்து
பேசிவிடும் தைரியம்
என்னிடம் எப்போதுமில்லை!

உன் அண்மையின் வாசத்தில்
என் சுவாசம் இறக்கிறது
அந்த காந்த பார்வையில்
என் தேகம் தீயாய் எரிகிறது!

உன் கூந்தல் உதிர்த்த‌
மல்லிகை மலர்கள்
என் இதயத்தில் விழுந்து
தினம் வாசம் செய்கிறது!

உன் இதழ்கள் உதிர்த்த‌
புன்னகைப் பூக்கள்
என் பருவத்தில் விழுந்து
மன‌வாசம் செய்கிற‌து!

நீ எங்கிருந்தாலும்
என் நினைவிலிருக்கிறாய்
எனவே தான் எப்போதும்
என் உயிரில் மிதக்கிறாய்!

பார்க்க பேச பழக
உன்னை தவிர மற்ற
எல்லோரிடமும் முடிகிறது
பார்த்து பார்த்து ரசிக்க
ரசித்து ரசித்து பார்க்க
மற்றவர்களை தவிர
உன்னிடம் தான்
எப்பவும் முடிகிறது!

உன்னிடம் பேச
ஆயிரம் இருக்கிறது
பேசிவிடத்தான்
இதயமும் துடிக்கிறது!

அதற்க்கு முன் உன்னிடம்
ஒரு கேள்வி
மறுக்காமல் பதில் சொல்
நான் உன்னிடம்
எப்படி பேசவேண்டும்
தோழனாகவா... காதலனாகவா...?

Sunday 13 December 2009

மதுரை தினகரன் தீர்ப்பு - சாகக்கிடக்கிறதா சட்டம்!



2007 மே மாதம் காலை 11 மணிக்கு மதுரையில் திகுதிகுவென கொளுந்து விட்டு எரிந்தது தினகரன் அலுவலகம், அட்டாக் பாண்டி & கோ வீசிய பெட்ரோல் குண்டால்... இதில் மூன்று பேர் அறைகளில் சிக்கி புகை மூட்டத்தால் மூச்சு விட முடியாமல் உயிரிழ‌ந்தார்கள்... அதில் இருவர் பொறியாளர்கள்.. ஒருவர் காவலாளி... இதற்காக தொடர்ந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ 17 பேர் மீது 8 சட்டப் பிரிவின் கீழ் 32 பக்க குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது... இதில் சட்டப்பிரிவு 302 & 307ம் அடக்கம்... கூடவே வெடிமருந்து சட்டப் பிரிவு 4 & 5 மற்றும் தமிழ் நாடு பொதுசொத்து சேதார சட்டப் பிரிவு 4ம் அடக்கம்... குற்றவாளிகளை தண்டிக்க இதை விட பெரிய சட்டங்கள் இந்தியாவில் இருந்தால் அது பொடாவும், தடாவும் தான்!

எரித்தது யார்? எரிக்கச்சொன்னது யார்? என்று மேலோகம், பூலோகம், சொர்க்கலோகம், இந்திரலோகம் என்று எல்லா லோகங்கலுக்கும், சிவன், விஷ்ணு, பிரம்மா முதல் சித்திரகுப்தன் வரை எல்லா ஜீவன்களுக்கும் தெளிவாய் தெரியும்... இவ்வளவு ஏன் எல்.கே.ஜி குழந்தையிடம் எதுவும் வாங்கி கொடுக்காமலேயே கேட்டாலே நச்சுன்னு நாக்கு தெரிக்கிற மாதிரி சொல்லிடும் இதுக்கெல்லாம் காரணம் அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி தான் என்று... கூடவே சம்பவத்தை நேரில் பதிவு செய்த‌ வீடியோ ஆதாரமிருக்கிறது. புகைப்பட ஆதாரமிருக்கிறது.

இந்த வழக்கிற்கு கடந்த புதன்கிழமை அன்று மதுரை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஒற்றை வரியில் ஒரு தீர்ப்பு வழங்கிருக்கிறது... அது 'விசாரனையின் போது பெரும்பான்மையான சாட்சிகள் விரோதமாக சொன்ன வாக்குமூலங்கலால் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை'  நீதிமன்றங்களின் நீதிப் பற்றி பேசினாலே நமக்கு பேதி வந்து மீதி இல்லாமல் போயிடும்... இந்த வழக்கில் 85 பேர் சாட்சியமளித்தனர்... சரி இதில் பெரும் பான்மையானவர்களின் சாட்சிகள் தான் சரியில்லை, சிறுபான்மையினரின் சாட்சிகளையாவது வைத்து தண்டித்திருக்கலாமே?



விடுதலையானவர்கள் இதற்கு கைமாறாக மத்தியானமா மதுரை மீனாச்சிய‌ம்மன் கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு... பதிலாக நேரே அண்ணன் அழகிரியை பார்த்து அவருக்கு லட்சார்ச்சனை பண்ணிவிட்டு தொடர்ந்து தங்கள் கடமைகளை செய்ய வேறு தடைகள் ஏதும் வர‌க்கூடாது என்று வேண்டிக்கொண்டு சென்றிருப்பார்கள். இந்த வெற்றியை அழகிரி அண்ணனின் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று கூறியிருக்கிறார் அட்டாக் பாண்டி... எங்க‌ சொல்றது இந்த கொடுமையை... கல்கத்தா காளி தான் இவங்களுக்கெல்லாம் கூலி குடுக்கணும்.

குற்ற‌வாளிக‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் வ‌ரை போராடுவோம் என்றார் ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌போது க‌லாநிதிமாற‌ன்.. ந‌ல்ல‌வேளை நீதி கிடைக்கும் வ‌ரை போராடுவோம் என்று சொல்லித் தொலைக்க‌வில்லை... குடிக்கிறதுன்னு முடிவான பிறகு குந்திகிட்டு குடிச்சா என்ன நின்னுகிட்டு குடிச்சா என்னங்கற கணக்கா சில‌ நாட்க‌ளுக்கு முன் தயாநிதிமாறன் த‌ன் பிற‌ந்த‌ நாளுக்கு அழ‌கிரிகிட்ட‌ ஆசிவாங்குன‌ நிக‌ழ்ச்சி ச‌ன் தொலைக்காட்சியிலும், ப‌த்திரிக்கையில் வ‌ந்த‌து... இதை பார்த்து பார்த்து புல‌ங்காகித‌ம் அடைந்து இவர்களை மனதார பாராட்டியிருக்கும் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் குடும்பங்கள்.

சம்பவத்தின் போது முதல்வர் 'இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி(!), தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை, வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்... ஐயா, என் மண்டையில் முண்டா புரட்டிக் கொண்டு தண்டால் எடுக்கிற ஒரு கேள்வி, 'சட்டப்படி நடவடிக்கை... சட்டப்படி நடவடிக்கைன்னா அது இதுதானுங்களா...!'



சம்பவத்தை சன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது... உலகமே இதை பார்த்தது... இருந்தும் சாட்சிகள் சரியில்லை என்று கூறி குற்றவாளிகளை நீதிமன்றம்  இப்படி விடுதலை செய்தால், இனி நீதி பற்றி எப்படி நமக்கு நம்பிக்கை வரும்... காவல் நிலையமும், நீதி மன்றமும் எதற்காக இயங்குகிறது நீதிக்காகவா, நிதிக்காகவா என்கிற கேள்வி எல்லோருக்கும் மூளையில் முக்காடு போட்டுக்கொண்டு முடங்கிக் கிடக்கிறது.

2000ம் ஆண்டு தர்மபுரியில் பஸ்ஸோடு மாணவிகளை எரித்த சம்பவத்திற்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் இப்படித்தான் சாட்சிகள் சரியில்லை என்று குற்றவாளிகளை விடுதலை செய்தது... இதை கண்டித்த உயர்நீதி மன்றம் அந்த வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது... சேலம் நீதிமன்றம் குற்றவாளிகளில் 3 பேருக்கு மரண தண்டனையும் 25 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது... இதை எதிர்த்து சம்மந்தப் பட்டவர்கள் மேல் முறையீடு செய்தபோது உயர்நீதி மன்றமும் அதே தண்டனையை உறுதி செய்தது... அதையும் எதிர்த்து மேல் முறையீடு செய்து இப்பொது அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது. உச்சநீதி மன்றம் மரண தண்டனையை  நிறுத்தி வைத்திருக்கிறது. வழக்கு நிலுவையில் உள்ளது.

இதேபோல் இந்த வழக்கிலும் உயர்நீதி மன்றம் தலையிட்டு வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றச் சொல்லுமா... இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ மேல் முறையீடு செய்யுமா என்பதெல்லாம் நமக்கு தெரியாது என்றாலும் கஞ்சா குடிச்சவன் காஞ்சி மடத்துக்கு போனா மட்டும் கஞ்சியா குடிக்கப் போறான்ங்கற மாதிரி தெள்ள தெளிவா தெரிந்த ஒன்று சம்மந்தப் பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்காது என்பது தான். பாவக்காய் கசக்குதுன்னு வேப்பங்காய தின்ன கதையாகத் தானிருக்கும்... பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

Thursday 10 December 2009

மானாட மயிலாடவா இல்லை நீ ஓட நான் ஓடவா!


மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடுறவங்கள பாராட்டாம போனா அது பச்ச‌ பாம்புக்கு பாய்சன் வச்ச மாதிரி... ஏன்னா ஒவ்வொருத்தரும் பிரமாதமா ஆடுறாங்க... அட்டகாசமா உடை உடுத்துறாங்க... ரொம்ப மெனக்கெடுறாங்க... ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கான்செப்ட் எடுத்துகிட்டு  ரிஸ்க் எடுத்து ஆடுறாங்க... கான்செப்ட்டுக்கு ஏத்த மாதிரி மேடையும் அற்புதமா இருக்கு... இவர்களை ஆட்டிவைக்கிற நடன இயக்குனர்களை எவ்வளவு பாராட்டுனாலும் தகும்... இந்த அளவுக்கு இவர்கள் தான் புது புது விசயங்களை புதுசு புதுசா தந்து அசத்துறாங்க.. இவர்கள் மேன்மேலும் வளர வேண்டும்... வாழ்த்துக்கள்!

நான் சொல்ல வந்த விசயம் இதைவிட முக்கியமானது... அது இங்கு அலப்பறையை கொடுத்துக் கொண்டிருக்கும் நடுவர்கள் பற்றியது தான்... தும்பிக்கையில்லாத யானை கணக்கா மூன்று பேரும் நீதிபதி சீட்டுல வந்து உட்காந்தவுடனேயே ஆடிகாத்துல அரளிப்பூ கொட்டுற மாதிரி அரங்கமே ஒரே அல்லு தான்... நடனமாட வர்றவங்ககிட்ட இவங்க கேக்குற கேள்விய அணுசக்தி விஞ்ஞானி அப்துல்கலாம் கூட கேட்க முடியாது... ஆடுறவங்க எடுத்துக்கறது நாலு நிமிசம்னா அத அக்கு வேற ஆணி வேறயா அலசி அராஞ்சி தீர்ப்பு சொல்ல போற மாண்புமிகு நீதிபதிகள் மூன்று பேரும் எடுத்துக்கறது நான்கு நிமிசத்துக்கு மேல... இவங்க வாய தொறக்குறத்துக்கு முந்தியே நாம வேற‌ சேனல் மத்திடனும்... இது தான் நாம தப்பிக்கிறத்துக்கு ஒரே வழி... இத தான் நிறைய பேர் செய்யறாங்க... இல்லைன்னா படுக்க வச்சி பச்ச மிளகாய தேச்ச மாதிரி உடம்பு முழுதும் எரியும்.


இதுல கற்புக்கரசி குஷ்பு தீர்ப்பு சொல்ற தோரனையப் பார்த்தா பச்ச குழந்தை கூட பார்த்தது போதும்னு படுக்க போயிடும் அப்பவே... ஆட்டத்த பத்தி இந்த ஆத்தா கொடுக்கற அறிவுரைய அறிவாலயத்துல கல்வெட்டா போடலாம்... அடுத்த தலைமுறையாவது படிச்சுட்டு பைத்தியமாகும்... இதுல அரசி சொல்ற தீர்ப்பு இருக்கே அது நாட்டாமையில அவங்க வீட்டுக்காரர் சொன்ன தீர்ப்ப மிஞ்சிடும் போங்க.

அடுத்து கலாக்கா இவங்க மனசுல என்னமோ நடனத்துக்கே இவங்க தான் கடவுள்னு நினைப்பு... ஆடுன ஆட்டத்தை பத்தி இஞ்சு பை இஞ்சா இவங்க கொடுக்கற வியக்கானம் இருக்கே... அத கேட்டுகிட்டு பேசாம‌ நிக்கிறத்துக்கு பதிலா ஆடுன‌வங்க ஆத்துல இற‌ங்கி அப்படியே போயிடலாம்... அட மக்கா இவங்க பேசுற பேச்சும், உச்சரிப்பும், பாவனையும் கடவுளே கண்ண கொடுத்துட்டு இந்த கண்றாவியெல்லாம் வேற பார்க்க வச்சுட்டியேன்னு கோபம் வரும் நமக்கு.

அப்புறம் நமீதா அம்மணி... இவுக அதிகமா துணி உடுத்துறதும் இல்லை, அதிகமா அலப்பறைய கொடுக்குறதும் இல்லைன்னாலும், இவுக பேசுற தமிழ் இருக்கே  அடடா, காதுல கனகாமர வாசம் வீசும்.

இவங்க மூனு பேர் மூடுக்கு என்னத்தோனுதோ அதுதான் தீர்ப்பு.. சில நேரம் திட்டுவாங்க.. சில நேரம் சிரிப்பாங்க.. சில நேரம் அழுவாங்க.. சில நேரம் குதிப்பாங்க.. சில நேரம் சிணுங்குவாங்க.. சில நேரம் துள்ளுவாங்க.. சில நேரம் முத்தம் கொடுப்பாங்க.. சில நேரம் கட்டிப்பிடிப்பாங்க.. இந்த மாதிரி கண்கொள்ளா காட்சியெல்லாம் பார்க்க காதுல இன்னும் ரெண்டு கண்ணு இருந்தா இன்னும் வசதியா இருக்கும் போங்க.

இவுங்க உடுத்துற உடையிருக்கே... போலீஸ் உடையில நமீதாவையும், தலையில கொம்பு வச்சுகிட்டு பேய் உடையில குஷ்புவையும், பள்ளிகூட உடையில கலாவையும் நாம‌ பார்த்து பார்த்து ரசிக்கலைன்னா நமக்கு பக்கவாதம் வந்துரும், பார்த்துக்கங்க‌ ஜாக்கிரதை.

கலைஞர் தொலைகாட்சியில் கொஞ்சம் பேராவது பார்க்குற‌ நிகழ்ச்சின்னா அது இது தான்... அதுலயும் நாளுக்கு நாள் இவங்க அட்டகாசம் அதிகமானா கஷ்டம் தான்... தொலைகாட்சி நிர்வாகம் தான் யோசிக்கனும் கட்டுற வரை தான் அது கைலி, கிழிஞ்சா புடித்துணிங்கறத!

Tuesday 8 December 2009

நிர்வாகம் என்னும் மந்திரசக்தி



நிர்வகிக்கும் மனிதருக்கும் நிர்வாகத்திற்கும் நிறையவே சம்மந்த மிருக்கிறது... குதிரை பூட்டிய தேருக்கும் சாரதிக்கும் இருக்கும் உறவு தான் அது... அன்றாடம் பார்த்து பார்த்து பழகிப்போன சில விசயங்கள் அல்லது வேலைகள் இப்படித்தான் அதிகபட்சம் இருக்குமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் அது அப்படியே தலைகீழாக மாறினால் எப்படி இருக்கும்... இப்படியும் மாற்ற முடியுமா என்ற பிரமிப்பு நிகழ்ந்தால், அந்த நிகழ்வுக்கு காரணமானவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்... அப்படிப்ப‌ட்டவரிடம் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது விசயம் இருக்க வேண்டும் தானே... ஆம் இருந்தது.. நிர்வாகம் என்பது அவ்வளவு லேசுப் பட்டது இல்லை தான் என்றாலும் அதை நாம் கையாலும் விதத்தில் கையாண்டால் அது ஒளிரும்... தூண்ட தூண்ட துளிரும்... மீட்ட மீட்ட மிளிரும்... எந்த எல்லையும் தொடக் கூடியது தான் என்கிற நம்பிக்கையை தரும்... அப்படி தந்தார் ஒருவர்...

நான் நான்கு வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்த அதே அலுவலகம்... இப்படித்தானிருக்கும் என்ற ரீதியில் இருந்த அலுவலக பணிகள்...அடுத்த ஒன்றரை வருடத்தில் ஒன்றும் பெரிய மாற்றமில்லை... அப்போது எங்கள் துறைக்கு புதிதாக தலைமையேற்றார் அவர். 'இவர் பெரிசாக என்ன செய்துவிடப் போகிறார்... பத்தோட பதினொன்று...' என்கிற ரீதியில் அப்போது பார்த்தார்கள்... அலட்சியமாய் பேசினார்கள்... வந்தவர் கொஞ்ச நாட்கள் அமைதியாய் கவனித்தார்... ஒவ்வொருவரையும் ஊடுருவினார்.. யார் எங்கே, என்ன, எப்படி என்று எடை போட்டார்... சில மாத‌ங்கள் விட்டு விஸ்வரூபமெடுத்தார்... எந்த பிரச்சனையையும் இடையில் யாருமின்றி நேரில் சந்தித்தார்... சம்மந்தபட்ட சதாரண ஊழியரையும் அழைத்து விவரம் அறிந்தார்... பிரச்சனைக்கு தீர்வு சொல்லி தீர்க்க நாள் குறித்தார்... குறித்த நாளில் முடிக்காதவர்களை திணறடித்தார்...



கொஞ்சம் கொஞ்சமாக விபரீதத்தை உணர்ந்தது அலுவலகம்... வந்திருப்பவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பவர் இல்லை, கேட்டுக் கொண்டிருக்க‌ச் சொல்லிவிட்டு சொல்பவர் என்று புரிந்தது... தப்பிக்க வழி, சொன்னதை செய்து முடிப்பது தான் என்ற நிலையை எட்டியது... அடுத்த ஒரு சில மாதங்களில் யார் யார் என்ன செய்யகிறார்கள்... அவர்களால் என்ன செய்ய முடியும்... எங்கே செய்ய முடியும்... எப்படி செய்ய முடியும் என்பது இவர் மூளைக்கு எட்டியதும் இவருக்கு பதவி உயர்வு கிட்டியது. மெதுவாக ஒவ்வொருவருடைய பதவியும், இடமும், வேலையும் மாறியது. புதிதாக சிலர் வந்தார்கள்.. ஆக்ரமித்தார்கள்.. எல்லோரும் மிரண்டார்கள்.. அலறினார்கள்... வேலை சொன்ன நேரத்தில் முடிந்தது.. இதுவே பழகிப்போனதும் தடைகள் தானாக உடைப்பட்டன. இப்போது அவருக்கு அடுத்த பதவியும் வந்து சேர்ந்தது.. சில வருடங்களுக்கு முன் இதே அலுவலகத்தை பார்த்தவர்கள் இப்போது பார்த்தால் நிச்சயம் மிரண்டு போவார்கள்... பெரிய பிரமிப்பு வருவது தவிர்க்கவோ, மறுக்கவோ முடியாதது.

சரி இதை நான் இங்கே எழுத காரணம் இருக்கிறது... நாம் எதையும் பார்க்கும் பார்வையில் தான் வெற்றியின் சதவீதம் இருக்கிறது. நம் பார்வை விசாலமானால் அதன் பலன் நிச்சயம் என்பதை கூறத்தான். இவரின் நிர்வாகம் எனக்கு தெளிவுபடுத்திய சில விசயங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. நிர்வாகம் பற்றி நான் தெளிவு கண்ட‌ சில‌ விச‌ய‌ங்க‌ள்...



1. முத‌லில் அலுவ‌ல‌க‌ சூழலை, அங்கு நடக்கும் செயல்களை தெளிவாக‌ ஆனால் அவ‌ச‌ர‌மாக  ஆராய்ந்து அறிந்து தெரிந்து கொள்ள‌ வேண்டும்.

2. சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ளை பார்த்து பேசி ப‌டிக்க‌ வெண்டும். அவ‌ர்க‌ளின் த‌குதி என்ன‌, வேக‌ம் என்ன‌, ந‌ம்பிக்கையின் எல்லை எவ்வ‌ள‌வு என்று புரிந்து கொள்ள‌ வேண்டும்.

3. பிர‌ச்ச‌னை என்கிறப‌ட்ச‌த்தில் இடையிலிருப்ப‌வ‌ர்க‌ளை விடுத்து அதில் ச‌ம்ம‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ளை நேரில் தீர‌ விசாரிக்க‌ வேண்டும்... அப்போது எந்த இட‌த்தில் முடிச்சு இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.

4. பிரச்சனைக்கு யாரையும் குறை கூறாமல் அதற்குறிய தீர்வை மிக தெளிவாக கூறி, அதை தீர்க்க யாரால் முடியும் என்றறிந்து அவரை உதவிக்கு தந்து முடிக்க நாள், நேரம் குறிக்க வேண்டும்.

5.எல்லா வசதியும் செய்து தந்தும் குறித்த தேதியில் வேலையை முடிக்காதவர்களை கூப்பிட்டு உரிய கரணம் கேட்க வேண்டும், கிடைக்காத பட்சத்தில் அவர்களை கொஞ்சம் அதிகமாகவே கண்டிக்கவேண்டும்.

6. கொஞ்சம் கொஞ்சமாய் யார் யார் எந்த வேலைக்கு சரியானவர்கள் என்று பார்த்து அவர்களை அங்கு மாற்றியமைக்க வேண்டும். தேவையென்றால் புதிதாக ஆட்களை எடுக்க வேண்டும்.

7. நெருக்கடி நேரத்திலும் ஊழியர்களை விட்டு கொடுக்காமல், வேலையை விட்டு தூக்கிவிடாமல் கரிசனம் காட்டவேண்டும். தகுந்த நேரத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டு தந்து உற்ச்சாகப்படுத்த வேண்டும்.

8. குறைகூறுபவர்களை, பாதிக்கப்பட்டவர்களை கூப்பிட்டு பேச வேண்டும். நிலமையை விளக்கி 'உனக்காக நான் இருக்கிறேன்' என்று நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

9. வேலையில் எந்த இடத்தில் முன்னேற முடியாமல் தடை வருகிறதோ அப்போதே எந்த தயக்கமமுமின்றி தன்னிடம் வரலாம் என்பதை எல்லொருக்கும் புரிய வைக்க வேண்டும்.

10. கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கீழிருப்பவர்களிடம் தன் பொறுப்புகளை ஒப்படைத்து, அவர்களை வழி நடத்திய படியே தான் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும்.

மேலே இருக்கும் 10 விசயங்களிலும் உங்களுக்கே தெரியாமல் ஹென்றி பயோலின் (Henri Fayol)  நிர்வாகம் பற்றிய குறிப்புகளும் (திட்டமிடல் (planning), ஒழுங்கமைத்தல்(organizing ), ஆணையிடுதல்(commanding ), இயைபாக்கல்(co-ordinating), கட்டுப்படுத்தல்(controlling)) மற்றும் மேலும் சிலரின் குறிப்புகளும் (ஊக்கப்படுத்தல் (motivation), நெறிப்படுத்தல் (directing), ஊழியரிடல் (staffing)) மறைந்திருப்பது வெளிப்படையாகவே தெரியும்.

இது போதும் நீங்கள் ஒரு நிர்வாகியாக வெற்றி பெற... முடிந்தால் முயன்று பாருங்களேன்.

      Monday 7 December 2009

      கண்ணாடி போட்டவனெல்லாம் கதாநாயகனா!



      தினம் தினசரிகளை புரட்டினால் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள்... எல்லாம் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களின் வரிசைதான்... இதில் நடிப்பவர்கள் யார்? இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார்? எதுவும் தெரியாது... எந்த விளம்பரமும் இல்லாமல் திடுதிப்புவென்று இப்படி புற்றீசல் போல் தினம் ஒரு படம் வெளிவந்தாலும் அதில் எத்தனை தலை தப்புகிறது என்றால் நூற்றில் ஒன்றோ இரண்டோ தான்... மீதி எல்லாம் தோல்விதான்... காசை இறைத்து கலர் கனவுகளோடு வந்த படங்கள் இப்படி காணமல்போனால் நஷ்டம் முழுதும் தயாரித்தவருக்குத்தான்... எப்படிப்போனாலும் குறைந்தபட்சம் ஒரு கோடியாவது தேவைப்படும் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்க... படம் தோல்வி என்றால் அது மிகப்பெரிய நஷ்டம்... எப்படி இது சத்தியம்... இதை எடுத்தவரின் நிலைமை என்னவாகும்... கஷ்டப்பட்டு கடன் வாங்கி கடனளியாகிரார்களா... கருப்பை கணக்கு காட்ட படம் எடுத்து நஷ்டம் அடையவேண்டும் என்று எடுக்கிறார்களா... சினிமா பற்றி தெரியாமல் இயக்குனர்களின் மகுடிக்கு மயங்கி மாட்டி கொள்கிறார்களா... இது பற்றி யோசித்தால் மிகப்பெரிய கேள்வி தான் நம் எதிரே நிற்கும்...

      இது போன்ற படங்களை இயக்கி, ஆள் மாட்டினால் அவர்கள் தலையில் ஆம்லேட் போட்டு விட துடிக்கும் இயக்குனர்களே, கொஞ்சம் யோசியுங்கள்... எதோ ஒரு படத்தை இயக்கி இயக்குனர் ஆகி விட வேண்டும் என்று நினைக்காமல், படத்தின் கதை என்ன... அது நிற்குமா... அதற்குப்பின் நாம் நிற்போமா... நடிப்பவர் யார்... அவருக்கு நடிக்கத்தெரியுமா என்பதைஎல்லாம் யோசியுங்கள்... படம் தோல்வி என்றால் இழக்கப்போவது நீங்கள் இல்லை ஆனால் இதனால் சிலர் இழப்பது மட்டுமல்ல இறக்கவும் கூடும் என்பதை நினைவில் வையுங்கள்...



      இது ஒருபுறமிருக்க இது போன்ற படங்களில் நடிப்பவர்களின் அட்டகாசம் இருக்கிறதே அது தான் மூளையில் மூஞ்சிரு நுழைஞ்ச மாதிரி எப்பவும்  குடைச்சல் கொடுக்கும் விஷயம்... இந்த படங்களில் நடித்த நாயகர்களை இதற்குமுன் யாரும் பார்த்ததில்லை... இனியும் யாரும் பார்க்கவும் முடியாது... அப்படியிருந்தும் முகத்தில் கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் அலப்பறையும், கத்தி கத்தி சவால் விடும் தோரணையும், விசிறி விசிறி நடக்கும் பாவணையும்... என்ன நினைக்கிறார்கள் இவர்கள்... உலகம் முழுதும் இவர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றா... என்ன கொடுமையடா சாமி...  கொஞ்சம் காசை கொடுத்து விட்டு ஹீரோவாக நடிக்க வந்ததால் இவர்களை கேள்வி கேட்க முடியாமல் முடங்கி போகிறார்களா இயக்குனரும் தயாரிப்பாளரும்...  நல்ல நிலையிலிருக்கும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு அலம்பல் செய்வதில்லை... எடுத்தவுடன் இவர்கள் ஆக்சன் ஹீரோதான்... இதில் பன்ச் டயலக் வேறு... படத்தில் எங்காவது கொஞ்சமாவது நடிக்க முயற்ச்சிக்கிறார்களா என்றால் அது தான் இல்லை...

      இது போன்ற படங்களை நாம் பார்க்க நேரிட்டால் காசு கொடுத்து கடப்பாறையை வாங்கி காதில் விட்டு கிட்டா போல தான்... அடுத்த கணமே நமக்கு கண்ணுல கசாயம் பட்ட மாதிரி எரிச்சலும், முள்லெலும்புல முள்ளு குத்தின மாதிரி கோவமும் வரும்... என்ன செய்யறது கஷ்டம் வந்தா சொல்லிட்டா வருது...

      அது சரி நடிக்கத் தெரியாதவர்களையும், இயக்கத் தெரியாதவர்களையும் வைத்து படம் எடுத்து அவர்கள் நஷ்டம் அடைவது மட்டுமல்லாமல் நம்மையும் கஷ்டப்பட வைக்கும் தயாரிப்பாளர்கள் எப்போது உணர்வார்கள் கொட்டும் குப்பையெல்லாம் குன்றாகது என்பதை...!