Wednesday 27 January 2010

போக்குவரத்து காவல்துறையின் வழிபறி வசூல்!



எப்பொதுமே காவல்துறையை சேர்ந்தவர்களைப் பார்த்தால் ஒதுங்கியே போய்விடும் அல்லது அருவருப்பாக பார்த்துவிட்டு நகரும் மனப்பான்மை நம்மிடையே வளர்ந்துவிட்டது... அவர்கள் நம் பக்கத்து வீட்டுகாரராக,  நண்பனின் தந்தையாக, தங்கையின் கணவனாக, தூரத்து சொந்தகாரராக என்று எப்படி இருந்தாலும் அவர்களை நாம் ஒரு தனி சாதியாகவோ அல்லது தனி ஒரு பிரிவாகவோதான் பார்க்கிறோம்... காரணம் அவர்கள் அப்படித்தான் பார்க்க வைக்கிறார்கள்... அப்படி பார்ப்பதைத் தான் அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள்... காவல்துறையின் சாபக்கேடு இது... இது எப்போது மாறும் என்பதற்கு எட்டுக்குடி முருகனுக்கு முட்டிபோட்டு வேண்டினாலும் விடை கிடைக்காது... காவல்துறை உங்கள் நண்பன் என்று எழுதி வைத்தால் மட்டும் போதாது... முதலில் நண்பருக்குறிய தகுதியை அடைய முயல வேண்டும்... பல துறைகளில் முன்னேறி சாதனை செய்து பல நாடுகளுக்கு, இடங்களுக்கு தயங்காமல் சென்று வரும் நம்மவர்களை யாரையாவது நம்மூர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று வரசொல்லுங்கள் பார்ப்போம்... மிரண்டு போய் மிரண்டா குடிப்பார்கள்... அரண்டு போய் அல்ககால் அடிப்பார்களே ஒழிய ஸ்டேசனுக்குள் மட்டும் காலடி எடுத்து வைக்கமாட்டார்கள்... அப்படி ஒரு நம்பிக்கை... இது ஒரு மானக்கேடான விசயம்... இந்த நிலை என்று மாறுகிறதோ அன்றே காவல்துறை நண்பனாக மதிக்கப்படும் நாள்... ஆனால் இது புரிய வேண்டியவர்களுக்கு கடைசிவரை புரியவே போறதில்லை என்பது தான் கசப்பான உண்மை!

இது இப்படியிருக்க போக்குவரத்து காவல்துறையினர் படுத்தும் பாடிருக்கிறதே, அடடா... நினைத்தாலே கரண்டுல கையை வ‌ச்சமாதிரி உடம்பெல்லாம் எரியும்... 'நான் வளர்கிறேனே மம்மி...' என்பது போல் நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்கள் வசூல் அராஜகம் அதிகரித்தாலும் யாரும் அதை கண்டு கொள்வதில்லை... குறிப்பாக அரசாங்கம் இதை பொருட்படுத்துவதே இல்லை... காரணம் என்னவென்று கடவுளுக்கு கற்பூரம் ஏற்றி கேட்டாலும் தெரியாது... நம் போகும் வாகனத்தின் குறுக்கே இவர்கள் கைநீட்டி விட்டாலே போதும் காட்டுக்குள்ள காண்டாமிருகத்த கண்ட மாதிரி 'திக்'ன்னு இருதயம் எகிறி குதிக்கும்... ட்ரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக், இன்சுரன்ஸ் பத்திரம் என்று எல்லாம் இருந்தாலும் இப்படித்தான் ஷாக் வரும்... காரணம் இவர்கள் மடக்கிவிட்டாலே 'மாலு' பார்க்காமல் விட மாட்டார்கள்... அதற்கு நிறைய காரணமும், தெரியாத பல சட்டங்களின் நம்பர்களும் சொல்லி மிரட்டுவார்கள்... பாதி வயித்துக்கு சாப்பிட்டுட்டு பஞ்சத்துல அடிபடறவன கூட இவங்க விடறதுல்ல... இவர்களிடமிருந்து தப்பிப்பவர்கள் பெரும்பாலும் வாகனங்களில் கட்சி கொடி கட்டியிருப்பவர்கள், வக்கில் எம்பளம், 'PRESS', 'POLICE' என்று போட்டிருப்பவர்கள் மட்டும் தான்.

மூன்று வழிச் சாலையில் பல்சரில் போறவன குறுக்க விழுந்து மறைக்கிறார்கள்... கேட்டால் ஓவர்ஸ்பீடாம்... 50 ஓவர் ஸ்பீடா என்று கேட்டால், இந்த ரோட்டுல‌ 40க்கு மேல போகக்கூடாது என்பார்கள்... (பல்சர்ல 40துல போறதுக்கு பதிலா பஞ்சிமுட்டாய் வங்கி சாப்பிட்டு கிட்டு படுத்து உருண்டே போய் சேரலாம் போக வேண்டிய இடத்துக்கு) அப்படி ஏதும் லிமிட்டேசன் போர்ட்டெல்லாம் இங்க இல்லையே என்றால், போலீஸ்காரன் கிட்டயே சட்டம் பேசறியா... உள்ள துக்கிப்போட்டா என்னாகும்னு தெரியுமா என்று மிரட்டுவார்கள்... போலீஸ்கிட்ட நாம பேசினாலும், போலீஸ் நாமகிட்ட பேசினாலும் அசிங்கம் நமக்குதான்(புது மொழி) என்கிறபடியால் கேட்ட காசை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிரவர்களை நாம் குறைகூற முடியாது... காரணம் எல்லோரும் இந்தியன் தாத்தாவாக மாறிவிட முடியாது இல்லை விஜ‌ய‌காந்தாக‌ மாறி ஸ்டேடிஸ்டிக் சொல்ல‌ முடியாது!


ப‌த்த‌டி த‌ள்ளி ட்ராபிக் இன்ஸ்பெக்ட‌ர் நின்று கொண்டிருப்பார்... அத‌ற்கு முன்னே நின்று ம‌றைக்கும் கான்ஸ்ட‌பிள் பேசும் பேச்சு இருக்கிறதே...

'ஐயா ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அவர்கிட்ட போனின்னா 1000, 2000 ன்னு பைன் போட்டு தீட்டிடுவாரு... என்கிட்டயே ஒரு 500 கொடுத்துட்டு சத்தம் இல்லாம  போயிடு...'

என்று மூச்சு விடாமல் உபதேசம் செய்து கொண்டிருந்தாலும் ரோட்டில் ஒரு கண்ணிருக்கும்... அடுத்த இளுச்சாவாயனுக்கு வலை வீச்சு...

'அவ்வள்வு பணம் இல்லை சார்...'

'சட்டம் தெரியாம பேசறய்யா... ஏதோ உன் முகத்துக்காகத் தான் பாக்குறேன்... சரி சரி... ஒரு 200 ரூபாயாவது எடு...'

'அவ்வளவு பணமும் இல்லை சார்...'

'என்னாய்யா ரோதனையா போச்சு... ஒரு 100வது கொடு...'

'அவ்வளவு இல்ல சார்...'

'எவ்வளவு தான்யா இருக்கு...'

'10 ரூபா தான் இருக்கு...'

'சரி சரி.. அதயாவது எடு... ஏதோ உன் முகத்துக்காகத் தான் விடறன்... போ...'

இது ஏதோ கற்பனை உரையாடலில்லை, உண்மையிலேயே நடந்தது... இந்த பிழைப்பிற்கு கெளரமா பிச்சை எடுக்கலாமா இல்லையா... இதைவிட சிட்டிகுள்ள லோடு ஏத்தி ஏதாவது ஒரு லாரி, 407, டெம்போ, ஐசர், டாடா ஏஸ், கண்டெய்னர், ட்ரைலர்ன்னு பார்த்துட்டா போதும், அன்னைக்கு தீபாவளிதான்... மாட்டுற‌ ட்ரைவருக்குத் தான் இவங்கள பார்த்தோன முதுகு தண்டுல முள்ள‌ம் பன்றி குத்தினமாதிரி இருக்கும்... இவங்களுக்கு குற்றாலத்துல கோழி பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கும். நிலைமை மோச‌மானா சைக்கிள்காரர்களை கூட இவங்க விட‌ற‌துயில்லை... என்ன‌ பிழைப்பு இது... இப்ப‌டியே இருந்தால் பொதும‌க்க‌ள் இவ‌ர்க‌ளை எப்படி ம‌திப்பார்க‌ள்!

உளவுப்பிரிவுகளை தன்னகத்தே வைத்திருக்கும் காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு இந்த அக்கிரமம் தெரியாமல் இருக்குமா... தெரியும் நன்றாக தெரியும்... DGP க்கு தெரியாமல் இருக்குமா... அவருக்கும் தெரியும்...  காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு இது தெரியாமலா இருக்கும்... தெரியும் அவருக்கும் நன்றாக தெரியும்... அப்புறம் ஏன் இப்படி... அப்புறம் ஏன் இப்படி.... அதுதான் தெரியாது!

அதுசரி, வண்டி ஓட்டுபவர்கள் எல்லாம் சரியாக வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை...அப்படி அவர்கள் வைத்துக்கொள்வதில்லை... அவர்கள் அதை உணர்ந்து


சரி செய்வதற்கு சரியான சந்தர்ப்பம் இங்கு வழங்கப்படவில்லை.... முறையாக அபராதம் விதித்து அரசுக்கு சேர்த்திருந்தால் எல்லோருக்கும் பயம் வரும்... விதிமுறைகளை மதிக்கும் மாற்றம் வரும்... இதற்கு ஒரு உதாரணம்... நண்பர் ஒருவரிடத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்ஸுரன்ஸ் முடிய போகுது  ரினிவல் செய்ய வேண்டும் என்றேன்... எவ்வளவு என்றார்... 1100 ரூபா என்றேன்... நான் ரினிவலே பண்றதே இல்ல என்றார்... போலீஸ் புடிச்சா என்றேன்... புடிச்சா 50தோ, 100ரோ கொடுத்துட்டு வந்துட வேண்டியது தான்... வருசத்துல 2 தடவையோ 3 தடவையோ தான் மாட்டுவோம்... அதிகபட்சமா 300 ரூபாயோட முடிஞ்சுடும்... 800 ரூபா மிச்சம்தானே... இதை கேட்ட எனக்கு தூக்கிவாரிப்போட்டது... அவர் சொல்வது சரிதான் என்று பட்டது.... இதற்கு காரணம் காவல்துறையின் செயல்தான்.... இன்ஸுரன்ஸ் இல்லாவிட்டால் அதற்க்குரிய அபராதம் 1000 ரூபா... ஒருமுறை அதை அபராதமாக அரசுக்கு கட்டியிருந்தால் மறுமுறை கட்டாமல் இருக்க தோன்றுமா... காவல்துறை இதை கட்டி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது... இதுபோலவே தான் மற்ற விதி மீறல்களும்... கீழே உள்ளவை தமிழகத்தின் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதங்கள்:

Driving without helmet                                            -50
Stop line violation signal jumbing, zig-zag riding        -50
Drunken Driving                                                      - Mobile court to decide
Over speeding/rash driving                                     -400
Insurence lapse                                                     -1000
Speaking on mobile while driving                             -1100
Registration lapse                                                  -500
Driving license lapse                                               -500
Permit lapse                                                         -500 (spot) + 2000 (Mobile Court)
Fitness certificate lapse, tax not paid, vehicle
head light not glowing, tyre change, bumper to
bumper change without getting RTO permit               -100

Tuesday 12 January 2010

தை வாசம்!



பழையன எரித்த
மார்கழியின் கடைசி இரவு
போனது போகியாக‌!

தமிழனின் முதல் நாளில்
கதிரவன் கண் விழிக்கும் முன்னே
கண் விழித்தாயிற்று!

விடியாத பின் இரவின்
முதிர்ந்து போன நாழிகைகளில்
உருவங்கள் நகர்வது
தெரிந்தது தெருவில்

எல்லோர் வீட்டு வாசலும்
சுகப்பட்டு கிடந்தன‌
கன்னிகளை சுமந்து!
கோல‌ம் போடும் க‌ன்னிக‌ளுக்கு
உத‌வி செய்தார்க‌ள்
அழ‌கை அட‌குப் பிடித்து செல்ல‌
வ‌ந்திருந்த‌ ஆட‌வ‌ர்க‌ள்!

வாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன் சொன்னது
என்ன‌வோ தெரிய‌வில்லை!
வெட்க‌ப்ப‌ட்ட‌ சிரிப்பு
சிந்தி சித‌றிய‌து கோல‌த்தின்
குறுக்கு புள்ளிக‌ளுக்கு இடையே

கிழ‌க்கு வான‌ம் முழுதும்
அட‌ந்திருந்த் இருட்டை
பொன்னிற‌ ஒளியால் சுத்த‌ம்
செய்து கொன்டிருந்தான் க‌திர‌வ‌ன்!

பசுமாடு பெய்ததை சுட சுட‌
போட்டிப்போட்டுக்கொண்டு
பிடித்து சென்றார்கள் கோமயமாக!
கரும்பு கேட்டு அழுதது
நேற்று அதே நினைவில் தூங்கியிருந்த‌
எதிர் வீட்டு குழந்தை!

பூசணிப்பூவை தந்துவிட்டு
அருகம்பில்லை வாங்கி கொண்டு
கடனை சமன் செய்து சென்றாள்
மூன்றாவது வீட்டின் மூன்றாவது
படிக்கும் சிறுமி!



செங்கற்களை அறைத்து
மாவாக்கி கொண்டிருந்தாள்
திருவையில் தங்கை!
மாடுகளின் கொம்புகளை
சீவிக்கொண்டிருந்தான் முனியன்!

9 மணிக்கு கோடுவெட்டி
11 மணிக்கு பொங்கள் வைத்து
12 மணிக்கு படையலிட சொல்லி சென்றான்
தண்டோரா போட்டவன்!

கூண்டிலிருந்து விடுதலையான‌
சந்தோசத்தில் சிதறி
மறைந்தன கோழிகள்!
உறக்கத்திலிருந்த தாயை
முட்டி மோதி உரசி
விளையாடிக்கொண்டிருந்தன
ஆறு மாத ஆட்டுக் குட்டிகள்!

'சர்' 'சர்' என்று சத்தம்
எல்லா மாட்டுக்கொட்டைகளிலும்
பால் தானம் நடந்து கொண்டிருந்தது!
ஆவாரம்பூவும், பூலாம்செடியும்
விற்று வந்தான் ஒரு வியாபாரி
ஹெர்குலஸ் சைக்கிளில்!

புது ம‌ண் பானைக‌ளையும், ச‌ட்டிக‌ளையும்
க‌ழுவி சுத்த‌ம் செய்து
ம‌ஞ்ச‌ள், இஞ்சி கொத்துக‌ள் க‌ட்டினாள்
இர‌வு முழுதும் தூங்காத‌ பாட்டி!

தெருமுழுதும் ந‌றும‌ன‌த்தை
இறைத்துச் சென்றாள் பூக்காரி
சோம்ப‌ல் முறித்து
சுறுசுறுப்பாய் எழுந்த‌து நாய்!

நான் காத்திருந்தேன்
நகரத்தின் மடியில்
நரகமாய் வாழ்வதை மறந்து!
மனித நெரிசலில்
சிக்கி த‌வித்து
மனதை மானத்தையும் இழந்ததை மறந்து!
பண ஆசையில்
பலவும் பறிபோனதை ம‌ற‌ந்து!

உயிரோட்டமாய் வரப்போகும்
சூரிய உதயத்தை பார்த்துவிட‌
ஊர்முழுதும் பரவப்போகும்
தை வாசத்தை சுவாசித்து விட!

Thursday 7 January 2010

விஜய் டிவி நீயா நானா - தாலியில் என்ன‌ விளையாட்டு!



நீயா நானா கோபிநாத் சாதாரண நிலையிலிருந்து முன்னேறி இன்று உலகம் முழுதும் தெரியும் பிரபலம். சிறந்த நிகழ்ச்சி நடத்துநராக நிறைய விருதுகளை பெற்றிருக்கிறார், இவர் எழுதிய 'ப்ளிஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!' புத்தகம் 50000 பிரதிகளை தாண்டி விற்பனையில் சக்கைப்பொடு போடுகிறது... இவர் நீயா நானா நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடித்தி வருகிறார் என்றாலும் தற்போது தலைப்புகளுக்கு பஞ்சமோ என்னவோ தெரியவில்லை மட்டமான தலைப்புகளோடு விவாதங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது... சாம்பிலுக்கு, 'அழகு மிகுந்தவரகள் தென்னிந்தியப் பெண்களா, வட இந்தியப் பெண்களா...', 'அண்ணிகளுக்குப் பிரச்சினை வருவது நாத்தனாராலா அல்லது கொழுந்தனாராலா...' என்பன. (சீக்கிரம் 'வெளக்கமாறு வீட்டை பெருக்கவா இல்லை புருசனை அடிக்கவா!' என்பது போன்ற தலைப்புகளை எதிர் பார்க்கலாம்... புருசனை அடிக்கத் தான் அணியில் இருப்பவர்களின் வீட்டு விளக்கமாறும், நாமும் தான் பதிதாபத்துக் குரியவர்கள்...) இந்த நிகழ்ச்சிக்கு சத்தமில்லாமல் ஒரு சர்ச்சை கிழம்பியிருக்கிறது... நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்பது தான் அது... குற்றம், நடந்தது என்ன... ஆப்டர் த ப்ரேக்... பவித்ரா... ஐயோ என் பொண்ணு...' என்று நான் போகமுடியாது என்பதால், விசயம் இதுதான்...

சமீபத்தில் அவர் விவாதிக்க எடுத்துக்கொண்ட தலைப்புகளில் ஒன்று, 'பெண்கள் தாலி அணிவது அவசியமா' என்பது. இது போல பல தலைப்புகளை சுட்டிக்காட்டி, இது போல் மற்ற மதங்களில் உள்ள சடங்குகளை, சம்பிரதாயங்களை ஏன் இவர்கள் விவாதத்துக்கு எடுத்து கொள்வதில்லை என்பது போன்ற பல விசயங்களை பேசி ஒரு சாரார் கூச்சலிட்டு, கொதித்தெழுந்தாலும், இதை ம‌த‌ சாய‌ம் பூசி பெரிசு ப‌டுத்துவ‌தோ, ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை வ‌ம்புக்கு இழுப்ப‌தோ தேவையில்லாத‌ ஆணி... மாட்டு கால் முறிந்த‌துன்னு மானோட‌ காலை ஒடைக்கிற‌து மாதிரி முட்டாள் த‌ன‌மான‌து... ஆனால் இந்த‌ தாலி த‌லைப்பில் அவ‌ர்கள் விவாததை பார்க்கும் போது சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி(இந்த பதத்திற்கு என்ன விளக்கம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!) என்பது போல் தான் இருக்கிறது.

நிகழ்ச்சியினிடையே கோபிநாத் ஒரு பெண்மணியிடம், 'மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் தாலியை கழற்றச்சொன்னால் கழற்றுவீர்களா?' என்று கேடக 'கழற்றி விட்டு சிகிச்சை முடிந்த பின்னர் அணிந்துகொள்வேன்' என்று கூறிய பெண்மணியிடம் 'மருத்துவர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வீர்களா?' என்று கேவலமாக ஒரு கேள்வியை கேட்டு அவரை அவமானம் செய்திருக்கிறார்... மிஸ்டர் கோபிநாத், நன்றாக விசயம் தெரிந்தவர் நீங்கள்... நடுநிலையாளராக நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு அவர்களின் சொந்த கருத்துக்களை திணிப்பதற்கு இங்கு இடமே இல்லை... நிகழ்ச்சிக்கு வருபவர்கள் உங்களை நடுனிலையாளர் என்று நினைத்து தான் வருகிறார்கள், ஆனால் பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்க்கிறேன், தாங்களுக்கு ஒத்துபோகிற முடிவுக்கு பேசுபவர்களை தாங்கள் ஊக்கப்படுத்துவதும், எதிரணியினரை கேலி பேசுவதும், கிண்டல் செய்வதும் உங்கள் நடவடிக்கையாகத் தானிருக்கிறது...



இந்த விவாதத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது... ஒரு சாராருக்கு நீங்கள் சாதகமாக இருக்கிறீர்கள் என்பதை மறைக்க முடியாமல் ஒரு வேகத்தில், கோபத்தில் உங்களின் மனதில் உள்ளதை கொட்டிவிட்டீர்கள்... இப்படி நீங்கள் அந்த பெண்மணியிடம் கேட்ட கேள்வியில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்காது... இதை பார்த்துக் கொண்டிருந்திருக்கும் அந்த பெண்ணின் கணவரும், உறவினர்களும் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்கள்... அதெல்லாம் பற்றி கவலையில்லாமல் ஒரு சாரரை திருப்திப் படுத்த‌, சிரிக்க வைக்க‌ நீங்கள் வாயில் வந்ததையெல்லாம் பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்... நீங்கள் கூப்பிட்டு, டிவியில் முகம் தெரியுமே என்று பேச வந்து விட்டார்கள் என்பதற்காக, நீங்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு வரவேண்டுமா என்று நினைக்காதீர்கள்!

தாலி தேவையில்லை என்கிற அணியில் பேசியவர்களின் கருத்துக்கள் சில:

* தாலி அணிவது வெறும் மூட நம்பிக்கையே. தெய்வீகமோ, புனிததன்மையோ அதில் இல்லை.
* வேலைக்குப் போகும் பெண்கள் தாலியை மறைத்து வைத்து கொள்கிறார்கள் அல்லது வீட்டிலேயே விட்டு விட்டு போய்விடுகிறார்கள்.
* பல பெண்கள் வீட்டைவிட்டு வெளியே கிள‌ம்பும்போது தாலியை வீட்டிலேயே கழற்றி வைத்து விடுகிறார்கள்.
* சில பெண்கள் இரவில் படுக்கும்போது தாலியை கழற்றி வைத்து விடுகிறார்கள்.
* தாலி என்பது நாய்களின் உரிமம் போன்றது. நாயின் கழுத்தில் தொங்குவது போல பெண்களின் கழுத்தில் அது தொங்குகிறது, அவ்வளவு தான்.

இந்த அணியில் பல பெண்கள் தாலியை கழற்ற தயாராக இருக்க, ஒரு 65 வது பெண்மணியை நோக்கி 'இப்போதே, இங்கேயே தாலியை கழற்றுவீர்களா?' என்று கோபிநாத் கேட்டவுடனேயே தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்திருக்கிறார் அந்த பெண்மணி. நிகழ்ச்சியின் இறுதியில் அவருக்கு 'சிறந்த பங்கேற்பாளர்' என்ற பரிசு வழங்கி கெளரவித்தார்களாம். அப்போது அந்த பெண்ணின் தைரியத்தையும், பகுத்தறிவையும் பாரட்டி கையொலி எழுப்புமாறு வற்பறுத்தியுள்ளார் கோபிநாத். இங்கே கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், தாலி தேவையில்லை என்று பேசியவர்கள் ஏன் தாலியை அணிந்து கொண்டு வந்தார்கள் அல்லது இன்னும் ஏன் அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான். தேவையில்லை என்று ஆன பிறகு துக்கிப் போட்டு விட்டு போக வேன்டியது தானே... தற்காலத்தில் எந்த ஆணும் தாலியை போட்டுக் கொள்ளவேண்டும் என்று மனைவியை கட்டாயம் செய்வதாக தெரியவில்லை... அலுவலகத்துக்கு போகும் பெண்கள் தாலியை மறைப்பது தாலிக்காக இல்லை தனக்கு திருமணமானதை யாருக்கும் காட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக... எங்களுடைய அலுவலகத்தில் கூட சில திருமணமான ஆண்கள் தாங்களை திருமணம் ஆகாதவர்களாக காட்டிக் கொள்கிறார்கள்... இதற்கு என்ன அர்த்தம் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்!



தாலியை நாய் உரிமத்துக்கு சமமாக பேசி கொச்சைப்படுத்தி மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்... தாலி என்பது அடிமைத் தனத்தை குறிக்கும் ஒரு கருவியாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்... நிறைய பெண்கள் தழைய தழைய தாலிப் போட்டுக் கொண்டு கணவரை தன் நுனி விரலில் ஆட்டு வைப்பதை நாம் நிறைய  பார்த்திருக்கிறோம்...  பெரியார் வழியில் வந்த நம் முதல்வர் அவர்களின் மனைவியாரும், துணைவியாரும் தாலி போட்டிருக் கிறார்களே அப்படி என்றால் அவர்கள் அடிமைகளா, இல்லை முதல்வர் தான் மூட நம்பிக்கையில் இருக்கிறாரா... பெரியாரின் வழி வந்தவர்கள் சீர்திருத்த திருமணங்களுக்கு தலைமை தாங்குகிறார்களே, அப்போது அவர்கள் கையால் மணமக்களிடம் எடுத்து கொடுப்பது தாலியைத் தானே... அது மூட நம்பிக்கை என்றால் அதை ஏன் அவர்கள் இன்னும் கடை பிடிக்கிறார்கள்... அவ்வளவு ஏன், கோபிநாத் அவர்கள், அவரது அம்மாவிடம் தாலியை அறுத்து தூக்கி தூர‌ எறியச் சொல்வாரா... அவரின் அம்மா தான் அதை செய்து விடுவாரா!

கடவுள் நேரில் வந்ததில்லை... நாம் பார்த்ததும் இல்லை... கேட்ட வரங்களை அவர் கொடுக்கிறாரா என்றும் தெரியாது... பின் இது மூட நம்பிக்கை தானே... பேசாமல் கோவில்களையும், மசூதிகளையும், தேவாலயங்களையும் இடித்து விடலாமா... அடுத்த தலைப்பாக இதை எடுத்து விவாதிக்க முடியுமா உங்களால்... தாலி என்பது நம்பிக்கை... அது மூட நம்பிக்கையோ, அடிமைத்தன்மோ இல்லை... அணிந்து கொள்வதோ, கூடாததோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது... இங்கு யாரும், யாரையும் கட்டாயப் படுத்தவில்லை... இதை பற்றிப் அவதூராக பேசி காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையை தகர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது... பெண் விடுதலையும், முன்னேற்றமும் அவளின் துணிச்சலிலும், தன்னம்பிக்கையிலும், முயற்சியிலும் தான் இருக்கிறது... அதை தாலி தடுத்துவிடும் என்பது சரியா என்ன... எந்த மதமாக இருந்தாலும், நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ மத சம்பந்தப் படுத்தப்பட்ட நிகழ்வுகள், சடங்குகள் காலம் காலமாக நம்பிக்கையை சேர்த்து வைத்திருக்கிறது என்றால் அதை அசிங்கமாக பேசுவதையும், கேலியாக சித்தரிப்பதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! இது எப்படி தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்களை எழுதும் உங்களுக்கு தெரியாமல் போனது என்பதுதான் விந்தை... படிக்கும் நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...

Monday 4 January 2010

புத்தக கண்காட்சியும், கமலும்!


ஞாயிற்றுக்கிழமை, கமல் வருகை இவை இரண்டும் போதும் புத்தக கண்காட்சி களைகட்ட... அல்லோல கல்லோல பட... கட்டியது... பட்டது... பைக் போட இடமின்றி ஆங்காங்கே வழியிலேயே நிறுத்திவிட்டு சென்றார்கள்... சென்றேன்... ஆறுமணிக்கு ஆர்ப்பாட்டமாக இருக்க வேணடிய மேடை வெறுச் சோடிகிடந்தது... முதல் நாள் வந்து கணிசமான புத்தகங்களை வாங்கி சென்றிருந்தாலும் மறுபடியும் அதே உற்சாகத்தோடு உள்ளே நுழைந்தேன்... புத்தகம் வாங்குவதில் இருக்கும் சந்தோசம் உண்மையில் அலாதியானது (வாங்கியதையெல்லாம் படிக்கிறோமா இல்லையா என்பதெல்லாம் பிரச்சனையே இல்லை இங்கே...)

ஸ்டால்களில் நிரம்பி வழியும் கூட்டம் ஊடகங்கள் எந்த ரூபத்தில் எத்தனை வந்தாலும் புத்தகம் படிப்பதில் இருக்கும் காதல் எப்போதும் குறையாது என்பதை பறைசாற்றியது... மற்ற வியாபார கேந்திரங்களைப் போலவே இங்கும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்... நான்கு வாங்கினால் ஒன்று இலவசம்... ஆறு வாங்கினால் ஒரு ஸ்க்ராட்ச் கார்ட் இலவசம் என்று உக்திகள் புகுத்தியிருப்பது நிச்சயம் நல்ல விசயம்... மெகா டிவி ஸ்டாலில் போகிற வருகிறவர்களுக்கு விளம்பர அட்டை கொடுத்து இடத்தை குப்பையாக்கினார்கள்... BSNL ஸ்டாலில் 3ஜி கார்டை வாங்கினால் ஒரு வால் கிளாக் இலவசம் என்று கூவி கூவி விற்றார்கள்... இவர்களிடம் 2ஜி கார்ட் வாங்கினாலே அது எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கும்... இதில் இது வேறயா... புத்தகம் விற்கும் இடத்தில் ஏன் தான் இவற்களுக்கெல்லாம் யார் ஸ்டால் கொடுத்து (பாலிடிக்ஸ் பாஸ்...) நம்ம உயிரை வாங்குகிறார்களோ...

கால்வாசி ஸ்டால்கள் ஆன்மீக ஆசிரமவாதிகளிடம் சரணாகதியாயிருந்தது... கிட்டதட்ட எல்லா ஸ்டால்களிலும் ஈழ வாசனை வெஞ்சாமரம் வீசியது... பாலகுமாரன், பிரபஞ்சன், சா.கந்தசாமி, எஸ்.ராமகிருஷ்னன், மனுஷ்ய புத்திரன் என்று எழுத்தாளர்களை தாராளமாகப் பார்க்கவும், சந்திக்கவும் முடிந்தது.


மணியை பார்த்துவிட்டு வெளியே வந்தால் மேடையில் கமல் இருந்தார்... ஸ்டாலின் குணசேகரன் பிடியில் மைக் திண்டாடியது... நன்றாகவும், சரளமாகவும் அவர் பேசினாலும் யாரும் கேட்கும் நிலையில் இல்லை... அவரும் இவர்களை விடுவதாக இல்லை... நாலில் ஒன்று பார்த்து விடுகிறேன் வா என்று விடாமல் பேசினார்... கடைசியாக ஒன்று சொல்கிறேன் என்று சொல்லி சொல்லியே நிறைய சொன்னார்... கைதட்டி கைதட்டி அவரை வழியனுப்ப பார்த்த கூட்டம் கோபத்தின் உச்சிக்கே சென்றது... பல பேச்சாளர்களுக்கு ஏனோ தெரியவில்லை மைக் முன்னால் எவ்வள்வு நேரம் நிற்கிறோம் என்பதைவிட எவ்வளவு நேரம் கேட்பவர்களின் மனதில் நிற்கிறோம் என்பது தான் முக்கியம் என்பது (அப்பாடா... ஒரு தத்துவத்த சொல்லியாச்சுப்பா... எழுதுற‌து முக்கியமில்லை... படிக்கிறவன் எழுந்து ஓடமா இருக்கறது ரொம்ப‌ முக்கியம் என்று நீங்கள் கூறுவது என் காதில் விழவில்லையே...)

ஒரு வழியாக கமல் மேடைக்கு வந்தார்... அவர் முகத்தில் இருந்த வசீகரம் எதிரேயிருப்பவர்களை கவர்ந்திழுத்தது உண்மை... இலக்கியமும், சினிமாவும் என்ற தலைப்பில் பேச வந்ததாக சொல்லிவிட்டு, தான் பேசுவதற்கு ஏதும் தயார் செய்து கொண்டு வரவில்லை என்றார். பன்முகம் கொண்ட ஒரு கலைஞனின் முதிர்ந்த, ஆழ்ந்த பேச்சை கேட்க ஆவலோடு வந்தவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாயிருந்தது... இருந்தும் எதாவது பேசுவார் என்று காத்திருந்தவர்களின் இதயத்தில் இடிதான் விழுந்தது... ஏதேதோ பேசினார்... பாலகுமாரனும், வேறொருவரும் இவரையும், தமிழ் சினிமாவையும்  கைபிடித்து இலக்கியத்துக்குள் கொண்டு வந்ததாகவும், சுஜாதாவை இவர் வற்புறுத்தி கைபிடித்து சினிமாவிற்கு கூட்டிவந்ததாகவும் சொன்னார்... தமிழுக்கும் சினிமாவிற்கும் இடையே பாலமாக நாம் தான் இருக்க வேண்டும் என்றார் (கடுப்பேத்துகிறார் யுவர் ஆனர்...) அப்போது தான் தமிழில் படம் வரும் என்றும், உலகம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்கும் என்றும் கூறினார்... (ஸ்ஸ்ஸ்... அப்பாடா...)

கமல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... தாங்களால் தயார் செய்து கொண்டு  வந்ததோ, தயார் செய்யாமல் வந்தோ பேச முடியாது என்கிற பட்சத்தில் தாங்கள் தங்களை விழாவிற்க்கு அழைக்க வருபவர்களிடம் வரமாட்டேன் என்று மறுத்துவிடுங்கள்... அது சாலச்சிறந்தது... அதை விடுத்து இப்படி உங்கள் பேச்சையும், அதன் வளமையையும் கேட்க‌ பெரும் ஆவலோடு வந்தவர்களை இப்படி ஏமாற்றாதீர்கள்... ஆம்லேட் சாப்பிட வந்தவர்களுக்கு ஆபாயில் கூட கொடுக்காமல் இப்படி ஆப் அடித்து, நோகடித்து வேக வைக்காதீர்கள்!

கூட்டத்தில் ஒரு ரசிகர் 'தலைவா... நீங்க தான் உலகத்துக்கே தலைவர்...' என்றபோது, 'ம்...ம்.... இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு... ஆனா இத நான் நம்பி ஏமாரமாட்டேன்... கேட்டுகிட்டு தூக்கிப்போட்டுட்டு போயிட்டேயிருப்பேன்...' என்றார் கமல்... இதுதாங்க உங்ககிட்ட புடிச்ச விசயம் சகலகலா வல்லவரே!

Friday 1 January 2010

சர்வதேச தரத்துடன் சென்னை விமான நிலையம்!


தலைப்பை படித்துவிட்டு அதிர்ச்சியில் ஆர்ட் அட்டாக் வந்தால் அதற்கு நான் சத்தியமாய் பொறுப்பு ஏற்க முடியாது... சர்வதேச தரத்துடன் தான் இல்லை சும்மா அப்படி சொல்லியாவது பார்த்துக் கொள்ளலாமே என்ற ஆசைத்தான், வேறொன்றுமில்லை!

உறவுக்காரப் பையன் மேற்படிப்புக்காக சிங்கப்பூர் செல்ல சென்னை வந்திருந்தான்... 'பையனுக்கு ஒன்றும் தெரியாது... பார்த்து அவனை அனுப்பி வை...' என்று சொல்லியிருந்தார் போனில் அவன் அப்பா... எனக்கு கொஞ்சமாவது விசயம் தெரியும் என்று ஒத்துக்கொள்ள உலகில் ஆளிருக்கிறதே என்று பெருமையாயிருந்த்து... அதனாலோ என்னமோ சிங்கப்பூருக்கு செல்லவெண்டிய பையன் ஏர்போர்ட் வருவதற்கு முன்னமே நான் அங்கு போய் சேர்ந்து விட்டேன். 'அண்ணே... லேட்டாயுடுச்சி... இன்னும் அரைமணி நேரத்தில் வந்துவிடுகிறேன்...' என்றான் போனில் பையன். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன க‌தையா என்ன‌ செய்ற‌‌துன்னு தெரியாம‌ நின்றிருந்தேன்...

விமான‌ நிலைய‌ க‌ட்டிட‌த்தின் புண்ணிய‌த்தில் எரித்த‌ வெயில் முழுவதும் நிற்பவர்களின் தலையில் அக்னி ஏவுகணையாக தாக்கியது... நடைபாதை வராண்டா முழுவதும் தடுப்புபோட்டு பார்வையாளர்களை உள்ளே விடாமல் காவல் காத்தார்கள்... பார்வையாளர்கள் வெளியேதான் நிற்கவேண்டும்... வெயிலுக்கே இப்படி என்றால், மழைக்கு... நம் பாடு படு கேவலமாகிவிடும்... வெளியூர் காரர்கள் காறி நம் மோரையில் துப்பிவிட்டு போவார்கள், 'உங்களுக்கெல்லாம் விமான நிலையம் ஒரு கேடா...' என்று. இது இப்படியிருக்க பக்கத்திலிருக்கும் ப்ளாட்பார்ம்கள் சிமெண்ட் பெயர்ந்து பள்ளம் பள்ளமாக இலவசமாக மழைநீர் சேமிப்பில் ஈடுப்பட்டிருந்தன... ஏறகனவே ரோடுகள் அப்படித்தான் இருந்தாலும் இவர்களாக வேறு இன்னும் கொஞ்சம் ஸ்பீட் பிரேக் போட்டிருந்தார்கள்... திரும்பும் இடமெல்லாம் மேஜரான பொண்ணுக்கு தென்னை ஓலையில் மரவடம் கட்டுவது மாதிரி பைபர் சீட்டுகள் வைத்து மறைத்திருந்தார்கள்... சுற்றிலும் குப்பையும் கூலமுமாய் பிச்சை எடுக்க பெருமாள் கோவிலுக்கு போன மாதிரி தான் இருந்தது பீலிங்.

இந்தியாவில் மும்பை மற்றும் டில்லிக்கு அடுத்தபடியாய் அதிக விமான போக்குவரத்து உள்ள பிஸியான விமான நிலையம்... சரக்கு போக்குவரத்தில் மும்பைக்கு அடுத்தபடியாக இர‌ண்டாவது இடத்தில் உள்ள ஒரு விமான நிலையம் ஏன் இப்படி கேட்பாரற்று கிடக்கிறது... இதை திரும்பிப் பார்த்து கவனம் செலுத்த ஏன் அரசு தயாராகயில்லை... மெரினாவை அழகு படுத்திவிட்டு கூவத்தை காவு கொடுக்க வேவுபார்த்துக் கொண்டிருக்கும் துணை முதல்வர் ஸ்டாலின் இதை கொஞ்சம் கவனித்தால் நம் தமிழக மானம் தினம் தினம் விமானம் ஏறுவது காப்பாற்றப்படும்.

விசயத்துக்கு வருகிறேன்... 30 நிமிடங்களை கடத்த வேண்டுமே என்கிற கவலையில் ஒரு ஓரமாக தடுப்பு கம்பியில் சாய்ந்து நின்று கொண்டேன்... எனக்கு பின்னால் நின்றிருந்த வாயில்காப்பாளர் ரொம்பவும் சின்சியர் என்பது தெரிந்தது... விமான நிலைய அதிகாரிகள், ஏர் ஹோஸ்டஸ் என்று யாரையும் விடவில்லை அவர்... நிறுத்தி அவர்கள் ஐ.டி கார்டில் இருக்கும் முகமும் அவர்கள் முகமும் ஒன்றுதானா என்று பார்த்து பார்த்துதான் உள்ளே அனுப்பினார்... வருபவர்களும் கோபமேயில்லாமல் பொறுமையாய் அவருக்கு ஒத்துழைத்தது என் செயல்களை மறுபரிசீலனை செய்ய வைத்தது... என் அலுவலக முன் கேட்டில் என்னை மறைக்கும் காவலாளியை 'நீ யாரடா என்னை சோதிப்பது... நான் யார் தெரியுமா...' என்பதுபோல் பார்ப்பதை நினைத்து அப்போது வெட்கப்பட்டேன். நான் இதை மாற்றிக்கொள்ள இங்கே பாடம் கிடைத்திருக்கிறது.


எனக்கு முன் சற்றுத்தள்ளி 'ப' வடிவ சுற்றுச்சுவருக்குள், மண் மூட்டைகளுக்கு மத்தியில் நின்றிருந்தார் ஒரு தேசிய பாதுகாப்பு படை வீரர்... தோலில் துப்பாக்கி வேறு... யார் பேச்சு துணையும் இல்லை... அவருடைய கூறிய கவனம் மட்டுமே அவருக்கு துணை... 30 நிமிட காத்திருப்புக்கே இப்படி இஞ்சி தின்ற குரங்காட்டம் நின்றிருக்கிறேனே... நாள் முழுதும் இவர் இப்படியே நிற்கிறாரே... அதற்கு எவ்வளவு பொறுமை தேவை... இங்கேயே இப்படியென்றால் ஆள் நடமாட்டமேயில்லாத காஷ்மீர் எல்லையில் தனியே, தன்னந்தனியே நிற்பவர்களை நினைக்கையில் மயிர் கூச்செரிகிறது... இது எவ்வளவு பெரிய தியாகம்... மனதுக்குள் அவருக்கு ஒரு சல்யூட் அடித்து மரியாதை செய்தேன்.

'க்ளாக் ரூம் எங்கயிருக்குன்னு மட்டும் சொல்லுங்க... நீங்க கூட வரவேண்டாம்...' என்ற பிரயாணியை

'நீ இதுக்கு காசெல்லாம் கொடுக்கவேண்டாம்பா... சும்மா வா.. நான் காட்டுறன்...' என்று கரிசனையாய் பேசி அழைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தார் ஒரு  டாக்ஸி ட்ரைவர்.

ஒரு ஹிந்திவாலா என்னை நோக்கி வந்தார்... அவரும் 'க்ளாக் ரூம் எங்கே இருக்கிறது...' என்றார். நான் அந்த ட்ரைவர் போன திசையை காட்டினேன்...

'ஏன் க்ளாக் ரூமை உள்ளே வைக்காமல் வெளியே வைத்திருக்கிறார்கள்... அங்கே எப்படி பெட்டியை நம்பி வைப்பது... அது எங்கேயிருக்கிறது என்று ஒரு வழிகாட்டி பலகை கூட இல்லை... என்னைபோல் எவ்வளவு பேரு கஷ்டப்படுவாங்க‌...' என்று பேச்சை புலம்பலோடு தொடர்ந்தார்...

'ரெனோவேச‌ன் வொர்க் ந‌ட‌க்கிற‌து அதான்...' என்று ச‌மாளித்தேன்.

அவ‌ர் நியூசிலாந்திலிருந்து ம‌லேசியா வந்து அங்கிருந்து சென்னை வந்திருக்கிறார். இங்கிருந்து டெல்லிக்கு அவருடைய கனெக்டிங் ப்ளைட் இன்னும் ஐந்து மணி நேரம் கழித்து தானாம்...

'ஊர் டெல்லியா...' என்றேன்.

'இல்லை பஞ்சாப்...' என்றவர் தொடர்ந்து 'வெரி ப்யூட்டிபுல் ப்லேஸ்...' என்று முடித்தார்.

எனக்கு அப்போது தான் பொறிதட்டியது... யாரவது வெளி நாட்டிலோ, வெளி மாநிலத்திலோ நம்மிடம் நம் ஊர் பற்றி கேட்டால், நாம் ஏன் இது மாதிரி 'தமில்நாட்... வெரி வெரி ப்யூட்டிபுல் ப்லேஸ்...' என்று சொல்வதில்லை... இனி கண்டிப்பாக இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டேன்(நீங்களும் எடுத்துக்கங்க!).

'ஐந்து மணி நேரம் சுற்றுவதற்கு சென்னையில் ஜில்லுன்னு ஒரு இடம் சொல்லுங்கள்...' என்று அடுத்த அம்பை வீசினார். நானும் முட்டிப்போட்டு முன்னூறு முறை யொசித்து யொசித்து சென்னையில் ஜில்லுன்னு ஒரு இடம் கிடைக்காமல் ஆடிப் பொய்விட்டேன்... எந்த இடத்தை சொல்வது (நீங்களாவது சொல்லுங்கள், அடுத்த முறை சுதாரித்து கொள்கிறேன்!)... தி.நகர் ரெங்கநாதன் தெருவிற்கு அனுப்பி  அரப்பரையை கொடுக்கலாம் என்று சோசித்து, அது நம்மை மேலும் அசிங்கப்படுத்துகிற காரியம் ஆதலால் கிடைத்ததடா இடம் என்று ஸ்பென்ஸர் ப்ளாஸாவை பரிந்துரை செய்தேன். (நிம்மதியப்பா...)

'வெளி நாடுகளுக்கு ஆள் அனுப்பும் வேலையைத்தான் செய்கிறேன்... உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள்...' என்றார்

'எந்த நாட்டுக்கு...' என்றேன்.

'உலகத்துல எந்த நாட்டுக்கு வேனா... யூ.எஸ், யூ.கே, கனடா, ஆஸ்திரேலியா...' என்றவரை மறித்தேன். அரண்டவனுக்கு ஆண்டவன பார்த்தாலும் அலர்ஜிங்கற மாதிரி அவரை ஏற இறங்க பார்த்தபடி

'ஆளவுடுப்பா சாமி... இந்த விளையாட்டுக்கு நான் வரலை...' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது உறவுக்காரப் பையன் வந்து விட்டான்... அத்துடன் பஞ்சாபிகாரருக்கு நான் பிரியாவிடை கொடுத்து அனுப்பிவிட்டு, அடுத்து நம்ம பையனுக்கு பிரியாவிடை கொடுக்க ஆயத்தமானேன்.

(அதற்கு பிறகு நடந்ததையும் எழுத ஆசை தான், நீங்கள் எங்கே எழுந்து போய்விட்டு இனி மார்கழி பாக்கமே தலை வைத்து படுக்க கூடாதுன்னு முடிவெடுத்து விடக்கூடாது என்பதால் விட்டுவிட்டேன்... பிழைத்துப் போங்கள்!)