Sunday 2 January 2011

நீயும், நானும்...!


நீயும், நானும் தான்!
என்ன செய்வது

ஊரும் உலகமும் சொல்கிறது
விரும்பினாலும் இல்லாவிட்டாலும்
ஒன்றாக இருந்து தான்
ஆக வேண்டியிருக்கிறது!

எரியும் நெருப்பு நான் சும்மாவேனும்
எரிந்து போயிருக்கலாம்!
தீபத்துக்கு தின்பொருளாய்
இருந்து போயிருக்கலாம்!

மெழுகுவ‌ர்த்தி திரியை
மென்று தின்றிருக்கலாம்!
ஏழை வீட்டு அ‌டுப்பின்
ஏழ்மையை விரட்டியிருக்கலாம்!

விளக்கு கம்பத்தில் நின்று
இருள் விழுங்கியிருக்கலாம்!
அகல் விளக்கு எண்ணையை
அருந்தி மகிழ்ந்திருக்கலாம்!

ஓடும் இயந்திரத்துக்கு
உயிராய் உராய்ந்திருக்கலாம்!
ஏவுகணைக்காக எரிந்து
ஏற்றம் பெற்றிருக்கலாம்!

இதெல்லாம் விடுத்து
உன் ஒரு முனையில் எரிந்து
மற்றவர் உயிரை எரிக்கும் உயிர‌ற்ற‌
செயலா வாய்க்கவேண்டும் எனக்கு!

சிதைத்துவிட்டு சிதையும் சிகரெட்டே
இப்புது வருடத்திலிருந்தாவது
நானில்லாது நீ ஆளில்லாது
வாழவேண்டும் பல்லாண்டு!

No comments: