Wednesday 27 January 2010

போக்குவரத்து காவல்துறையின் வழிபறி வசூல்!



எப்பொதுமே காவல்துறையை சேர்ந்தவர்களைப் பார்த்தால் ஒதுங்கியே போய்விடும் அல்லது அருவருப்பாக பார்த்துவிட்டு நகரும் மனப்பான்மை நம்மிடையே வளர்ந்துவிட்டது... அவர்கள் நம் பக்கத்து வீட்டுகாரராக,  நண்பனின் தந்தையாக, தங்கையின் கணவனாக, தூரத்து சொந்தகாரராக என்று எப்படி இருந்தாலும் அவர்களை நாம் ஒரு தனி சாதியாகவோ அல்லது தனி ஒரு பிரிவாகவோதான் பார்க்கிறோம்... காரணம் அவர்கள் அப்படித்தான் பார்க்க வைக்கிறார்கள்... அப்படி பார்ப்பதைத் தான் அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள்... காவல்துறையின் சாபக்கேடு இது... இது எப்போது மாறும் என்பதற்கு எட்டுக்குடி முருகனுக்கு முட்டிபோட்டு வேண்டினாலும் விடை கிடைக்காது... காவல்துறை உங்கள் நண்பன் என்று எழுதி வைத்தால் மட்டும் போதாது... முதலில் நண்பருக்குறிய தகுதியை அடைய முயல வேண்டும்... பல துறைகளில் முன்னேறி சாதனை செய்து பல நாடுகளுக்கு, இடங்களுக்கு தயங்காமல் சென்று வரும் நம்மவர்களை யாரையாவது நம்மூர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று வரசொல்லுங்கள் பார்ப்போம்... மிரண்டு போய் மிரண்டா குடிப்பார்கள்... அரண்டு போய் அல்ககால் அடிப்பார்களே ஒழிய ஸ்டேசனுக்குள் மட்டும் காலடி எடுத்து வைக்கமாட்டார்கள்... அப்படி ஒரு நம்பிக்கை... இது ஒரு மானக்கேடான விசயம்... இந்த நிலை என்று மாறுகிறதோ அன்றே காவல்துறை நண்பனாக மதிக்கப்படும் நாள்... ஆனால் இது புரிய வேண்டியவர்களுக்கு கடைசிவரை புரியவே போறதில்லை என்பது தான் கசப்பான உண்மை!

இது இப்படியிருக்க போக்குவரத்து காவல்துறையினர் படுத்தும் பாடிருக்கிறதே, அடடா... நினைத்தாலே கரண்டுல கையை வ‌ச்சமாதிரி உடம்பெல்லாம் எரியும்... 'நான் வளர்கிறேனே மம்மி...' என்பது போல் நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்கள் வசூல் அராஜகம் அதிகரித்தாலும் யாரும் அதை கண்டு கொள்வதில்லை... குறிப்பாக அரசாங்கம் இதை பொருட்படுத்துவதே இல்லை... காரணம் என்னவென்று கடவுளுக்கு கற்பூரம் ஏற்றி கேட்டாலும் தெரியாது... நம் போகும் வாகனத்தின் குறுக்கே இவர்கள் கைநீட்டி விட்டாலே போதும் காட்டுக்குள்ள காண்டாமிருகத்த கண்ட மாதிரி 'திக்'ன்னு இருதயம் எகிறி குதிக்கும்... ட்ரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக், இன்சுரன்ஸ் பத்திரம் என்று எல்லாம் இருந்தாலும் இப்படித்தான் ஷாக் வரும்... காரணம் இவர்கள் மடக்கிவிட்டாலே 'மாலு' பார்க்காமல் விட மாட்டார்கள்... அதற்கு நிறைய காரணமும், தெரியாத பல சட்டங்களின் நம்பர்களும் சொல்லி மிரட்டுவார்கள்... பாதி வயித்துக்கு சாப்பிட்டுட்டு பஞ்சத்துல அடிபடறவன கூட இவங்க விடறதுல்ல... இவர்களிடமிருந்து தப்பிப்பவர்கள் பெரும்பாலும் வாகனங்களில் கட்சி கொடி கட்டியிருப்பவர்கள், வக்கில் எம்பளம், 'PRESS', 'POLICE' என்று போட்டிருப்பவர்கள் மட்டும் தான்.

மூன்று வழிச் சாலையில் பல்சரில் போறவன குறுக்க விழுந்து மறைக்கிறார்கள்... கேட்டால் ஓவர்ஸ்பீடாம்... 50 ஓவர் ஸ்பீடா என்று கேட்டால், இந்த ரோட்டுல‌ 40க்கு மேல போகக்கூடாது என்பார்கள்... (பல்சர்ல 40துல போறதுக்கு பதிலா பஞ்சிமுட்டாய் வங்கி சாப்பிட்டு கிட்டு படுத்து உருண்டே போய் சேரலாம் போக வேண்டிய இடத்துக்கு) அப்படி ஏதும் லிமிட்டேசன் போர்ட்டெல்லாம் இங்க இல்லையே என்றால், போலீஸ்காரன் கிட்டயே சட்டம் பேசறியா... உள்ள துக்கிப்போட்டா என்னாகும்னு தெரியுமா என்று மிரட்டுவார்கள்... போலீஸ்கிட்ட நாம பேசினாலும், போலீஸ் நாமகிட்ட பேசினாலும் அசிங்கம் நமக்குதான்(புது மொழி) என்கிறபடியால் கேட்ட காசை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிரவர்களை நாம் குறைகூற முடியாது... காரணம் எல்லோரும் இந்தியன் தாத்தாவாக மாறிவிட முடியாது இல்லை விஜ‌ய‌காந்தாக‌ மாறி ஸ்டேடிஸ்டிக் சொல்ல‌ முடியாது!


ப‌த்த‌டி த‌ள்ளி ட்ராபிக் இன்ஸ்பெக்ட‌ர் நின்று கொண்டிருப்பார்... அத‌ற்கு முன்னே நின்று ம‌றைக்கும் கான்ஸ்ட‌பிள் பேசும் பேச்சு இருக்கிறதே...

'ஐயா ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அவர்கிட்ட போனின்னா 1000, 2000 ன்னு பைன் போட்டு தீட்டிடுவாரு... என்கிட்டயே ஒரு 500 கொடுத்துட்டு சத்தம் இல்லாம  போயிடு...'

என்று மூச்சு விடாமல் உபதேசம் செய்து கொண்டிருந்தாலும் ரோட்டில் ஒரு கண்ணிருக்கும்... அடுத்த இளுச்சாவாயனுக்கு வலை வீச்சு...

'அவ்வள்வு பணம் இல்லை சார்...'

'சட்டம் தெரியாம பேசறய்யா... ஏதோ உன் முகத்துக்காகத் தான் பாக்குறேன்... சரி சரி... ஒரு 200 ரூபாயாவது எடு...'

'அவ்வளவு பணமும் இல்லை சார்...'

'என்னாய்யா ரோதனையா போச்சு... ஒரு 100வது கொடு...'

'அவ்வளவு இல்ல சார்...'

'எவ்வளவு தான்யா இருக்கு...'

'10 ரூபா தான் இருக்கு...'

'சரி சரி.. அதயாவது எடு... ஏதோ உன் முகத்துக்காகத் தான் விடறன்... போ...'

இது ஏதோ கற்பனை உரையாடலில்லை, உண்மையிலேயே நடந்தது... இந்த பிழைப்பிற்கு கெளரமா பிச்சை எடுக்கலாமா இல்லையா... இதைவிட சிட்டிகுள்ள லோடு ஏத்தி ஏதாவது ஒரு லாரி, 407, டெம்போ, ஐசர், டாடா ஏஸ், கண்டெய்னர், ட்ரைலர்ன்னு பார்த்துட்டா போதும், அன்னைக்கு தீபாவளிதான்... மாட்டுற‌ ட்ரைவருக்குத் தான் இவங்கள பார்த்தோன முதுகு தண்டுல முள்ள‌ம் பன்றி குத்தினமாதிரி இருக்கும்... இவங்களுக்கு குற்றாலத்துல கோழி பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கும். நிலைமை மோச‌மானா சைக்கிள்காரர்களை கூட இவங்க விட‌ற‌துயில்லை... என்ன‌ பிழைப்பு இது... இப்ப‌டியே இருந்தால் பொதும‌க்க‌ள் இவ‌ர்க‌ளை எப்படி ம‌திப்பார்க‌ள்!

உளவுப்பிரிவுகளை தன்னகத்தே வைத்திருக்கும் காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு இந்த அக்கிரமம் தெரியாமல் இருக்குமா... தெரியும் நன்றாக தெரியும்... DGP க்கு தெரியாமல் இருக்குமா... அவருக்கும் தெரியும்...  காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு இது தெரியாமலா இருக்கும்... தெரியும் அவருக்கும் நன்றாக தெரியும்... அப்புறம் ஏன் இப்படி... அப்புறம் ஏன் இப்படி.... அதுதான் தெரியாது!

அதுசரி, வண்டி ஓட்டுபவர்கள் எல்லாம் சரியாக வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை...அப்படி அவர்கள் வைத்துக்கொள்வதில்லை... அவர்கள் அதை உணர்ந்து


சரி செய்வதற்கு சரியான சந்தர்ப்பம் இங்கு வழங்கப்படவில்லை.... முறையாக அபராதம் விதித்து அரசுக்கு சேர்த்திருந்தால் எல்லோருக்கும் பயம் வரும்... விதிமுறைகளை மதிக்கும் மாற்றம் வரும்... இதற்கு ஒரு உதாரணம்... நண்பர் ஒருவரிடத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்ஸுரன்ஸ் முடிய போகுது  ரினிவல் செய்ய வேண்டும் என்றேன்... எவ்வளவு என்றார்... 1100 ரூபா என்றேன்... நான் ரினிவலே பண்றதே இல்ல என்றார்... போலீஸ் புடிச்சா என்றேன்... புடிச்சா 50தோ, 100ரோ கொடுத்துட்டு வந்துட வேண்டியது தான்... வருசத்துல 2 தடவையோ 3 தடவையோ தான் மாட்டுவோம்... அதிகபட்சமா 300 ரூபாயோட முடிஞ்சுடும்... 800 ரூபா மிச்சம்தானே... இதை கேட்ட எனக்கு தூக்கிவாரிப்போட்டது... அவர் சொல்வது சரிதான் என்று பட்டது.... இதற்கு காரணம் காவல்துறையின் செயல்தான்.... இன்ஸுரன்ஸ் இல்லாவிட்டால் அதற்க்குரிய அபராதம் 1000 ரூபா... ஒருமுறை அதை அபராதமாக அரசுக்கு கட்டியிருந்தால் மறுமுறை கட்டாமல் இருக்க தோன்றுமா... காவல்துறை இதை கட்டி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது... இதுபோலவே தான் மற்ற விதி மீறல்களும்... கீழே உள்ளவை தமிழகத்தின் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதங்கள்:

Driving without helmet                                            -50
Stop line violation signal jumbing, zig-zag riding        -50
Drunken Driving                                                      - Mobile court to decide
Over speeding/rash driving                                     -400
Insurence lapse                                                     -1000
Speaking on mobile while driving                             -1100
Registration lapse                                                  -500
Driving license lapse                                               -500
Permit lapse                                                         -500 (spot) + 2000 (Mobile Court)
Fitness certificate lapse, tax not paid, vehicle
head light not glowing, tyre change, bumper to
bumper change without getting RTO permit               -100

6 comments:

hayyram said...

ennatha solla. ivanuha thirunthave mattainga...

www.hayyram.blogspot.com

Anonymous said...

///உளவுப்பிரிவுகளை தன்னகத்தே வைத்திருக்கும் காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு இந்த அக்கிரமம் தெரியாமல் இருக்குமா... தெரியும் நன்றாக தெரியும்... DGP க்கு தெரியாமல் இருக்குமா... அவருக்கும் தெரியும்... காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு இது தெரியாமலா இருக்கும்... தெரியும் அவருக்கும் நன்றாக தெரியும்... அப்புறம் ஏன் இப்படி... அப்புறம் ஏன் இப்படி.... அதுதான் தெரியாது!////

ஏன் தெரியாது?....
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உயர்ந்த பண்பினால்தான்.

////'ஐயா ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அவர்கிட்ட போனின்னா 1000, 2000 ன்னு பைன் போட்டு தீட்டிடுவாரு... என்கிட்டயே ஒரு 500 கொடுத்துட்டு சத்தம் இல்லாம போயிடு...'

என்று மூச்சு விடாமல் உபதேசம் செய்து கொண்டிருந்தாலும் ரோட்டில் ஒரு கண்ணிருக்கும்... அடுத்த இளுச்சாவாயனுக்கு வலை வீச்சு...

'அவ்வள்வு பணம் இல்லை சார்...'

'சட்டம் தெரியாம பேசறய்யா... ஏதோ உன் முகத்துக்காகத் தான் பாக்குறேன்... சரி சரி... ஒரு 200 ரூபாயாவது எடு...'

'அவ்வளவு பணமும் இல்லை சார்...'

'என்னாய்யா ரோதனையா போச்சு... ஒரு 100வது கொடு...'

'அவ்வளவு இல்ல சார்...'

'எவ்வளவு தான்யா இருக்கு...'

'10 ரூபா தான் இருக்கு...'

'சரி சரி.. அதயாவது எடு... ஏதோ உன் முகத்துக்காகத் தான் விடறன்... போ...'////

இதை நான் வழிமொழிகிறேன்.
எனக்கும் இப்படியான ஒரு அனுபவம் கிடைத்தது....
என் அறிவுரை: அவர்களிடம் பயபடாதீர்கள். என்னிடம் காசு இல்லை என்பதையே திரும்ப திரும்ப சொல்லிகொண்டிருங்கள். பாக்கெட்டில் 10 ரூபாய் சில்லறை எப்போதும் வைத்திருங்கள் -சில்லலறைகளுக்கு கொடுக்க....

renga

வடுவூர் குமார் said...

பல வேளைகளில் இவர்கள் மீது எனக்கு அனுதாபம் தான் வருது,சாலையின் நட்ட நடுவே பல வாகனங்களுக்கு நடுவே நம்மூர் வெய்யிலில் கை மூலம் போக்கு வரத்தை சரி செய்யும் பணி சாதாரணமானது அல்லவே!! இருந்தாலும் இத்துறையில் லஞ்சம் என்பது “உள்ளங்கை நெல்லிக்கணி” என்பது படங்கள்,திரைப்படங்கள் மட்டும் செய்திதாள்களில் பல முறை சொல்லப்பட்டாலும் அதை தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி அரசாங்கம் காட்டிக்கொள்வதில்லை என்பது தான் சோகம்.
சமீபத்தில் என் மனைவியை நிறுத்தி ஸ்கூட்டில் வேகமாக போனதாக சொல்லி 1500 ரூபாயில் இருந்து ஆரம்பித்து கடைசியில் 300 ரூபாய் வாங்கிக்கொண்டு விட்டனராம்.ஆமாம் இந்த Over Speed என்பதை கோர்ட்டுக்கு போனால் எப்படி என்று அங்கு நிரூபிக்க வேண்டாமா?

வடுவூர் குமார் said...

கத்திப்பாரா பாலத்தில் போகக்கூடிய வேகம் எவ்வளவு தெரியுமா?
சிரிக்காதீங்க
20 கி.மீட்டர். அங்கு போர்ட் வைத்திருக்கார்கள்.

Pinnai Ilavazhuthi said...

சிக்னல் பச்சையில் இரு விநாடி இருக்கும் போது சிக்னல் கிராஸ் பண்ணுவதாகவும் பணம் கேக்கும் அவலத்தை மறந்துட்டிங்க. மத்திய கைலாஷ் சிக்னலில் பச்சை விளக்கில் இரு விநாடி இருக்கும் போது கிராஸ் பண்ணிய என்னிடம் 100 வாங்கிய (அனைத்தும் என்னிடம் இருந்தும்) அந்த அயோக்கியர்களை என்ன செய்ய. நல்ல ஆக்கம் சார்

Anonymous said...

saba

super